×

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பிராட் திடீர் ஓய்வு அறிவிப்பு

லண்டன்:இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையே ஆஷஸ் தொடரில் கடைசி மற்றும் 5வது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. இதில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 283 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 103.1 ஓவரில் 295 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 3வது நாளான நேற்று 12 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் 42, ஜாக் கிராவ்லி 73 ரன்னில் அவுட் ஆனார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 42, ஹாரி புரூக் 7 ரன்னில் வெளியேற ஜோரூட் 91 ரன்னிலும், பேர்ஸ்டோ 78 ரன்னிலும் அவுட் ஆகினர்.

அடுத்து வந்த கிறிஸ் வோக்ஸ் 1, மொயீன் அலி 29, மார்க்வுட் 9 ரன்னில் பெவிலியன் திரும்ப நேற்றைய ஆட்ட நேரமுடிவில் இங்கிலாந்து 80 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 389 ரன் எடுத்து 377 ரன் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது. ஆஸ்திரேலிய பவுலிங்கில் ஸ்டார்க் 4, டாட் மர்பி 3 விக்கெட் எடுத்தனர். இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 2, ஜேம்ஸ் ஆண்டர்சன் 8 ரன்னில் இன்று 4வதுநாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதனிடையே இந்த டெஸ்ட்டுடன் தனது 17 வருட சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்டூவர்ட் பிராட் அறிவித்துள்ளார். 37 வயதான அவர் 166 டெஸ்ட்டில் 600 விக்கெட் எடுத்துளளார். 121 ஒருநாள் போட்டிகளில் 178,56 டி.20 போட்டியில் 65 விக்கெட் எடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய ஸ்டுவர்ட் பிராட், “இது ஒரு அற்புதமான பயணம், நாட்டிங்ஹாம்ஷயர் மற்றும் இங்கிலாந்து பேட்ஜ் அணிந்திருப்பது ஒரு பெரிய பாக்கியம். நான் எப்போதும் போல் கிரிக்கெட்டை நேசிக்கிறேன். தற்போதைய ஆஷஸ் தொடர் ஒரு அற்புதமான தொடராக இருந்தது. இத்தொடரில் ஒரு பகுதியாக நானும் இருந்ததில் மகிழ்ச்சி. நேற்று இரவு ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஜோ ரூட் ஆகியோரிடம் எனது ஓய்வு முடிவை கூறினேன். உண்மையைச் சொல்வதானால், இது சரியான நேரம் என்று உணர்ந்ததால் இப்போதே ஓய்வு பெற விரும்புகிறேன்\” என்று அவர் கூறினார்.

The post சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பிராட் திடீர் ஓய்வு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Brad ,London ,Ashes ,England ,Australia ,London Oval ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை