×

6 விக்கெட் வித்தியாசத்தில் வெ.இண்டீஸ் வெற்றி; எங்களின் திறமைக்கு ஏற்ப பேட்டிங் செய்யவில்லை: இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டி

பிரிட்ஜ்டவுன்:இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற நிலையில் 2வது போட்டி நேற்றிரவு நடந்தது. இந்திய அணியில் ரோகித் சர்மா, கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார். டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், இஷான் கிஷன்- சுப்மன் கில் சிறப்பான தொடக்கம் அமைத்தனர். 16.5 ஓவர்களில் 90 ரன்னாக இருந்த போது கில் 34 ரன்னில் (49 பந்து, 5 பவுண்டரி) கேட்ச் ஆனார்.

இஷான் கிஷன் 55 ரன்னில் (55 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேற அதன்பின்னர் இந்தியா சரிவை சந்தித்தது. ஹர்திக் பாண்ட்யா 7, சஞ்சு சாம்சன் 9, அக்சர் பட்டேல் 1, ஜடேஜா 10, சூர்யகுமார் யாதவ் 24, ஷர்துல் தாகூர் 10, உம்ரன் மாலிக் 0, முகேஷ்குமார் 6 ரன்னில் அவுட் ஆகினர். 40.5 ஓவரில் இந்தியா 181 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. குல்தீப்யாதவ் 8 ரன்னில் நாட்அவுட்டாக இருந்தார். வெஸ்ட்இண்டீஸ் பவுலிங்கில் ரொமாரியா ஷெப்பர்டு, குடகேஷ் மோட்டி தலா 3, அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் களம் இறங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் மேயர்ஸ் 36, பிராண்டன் கிங் 15, அடுத்துவந்த அதான்ஸே 6, ஹெட்மயர் 9 ரன்னில் அவுட்ஆக கேப்டன் ஷாய் ஹோப், கார்டி பொறுப்பாக ஆடி அணியை வெற்றிபெற வைத்தனர். 36.4 ஒவர்களில் 4 விக்கெட் இழந்து 182 ரன் எடுத்த வெஸ்ட்இண்டீஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷாய் ஹோப் 63 (80 பந்து,) கார்டி 48 (65 பந்து) ரன்னில் களத்தில் இருந்தனர். இந்திய பவுலிங்கில் ஷர்துல் தாகூர் 3, குல்தீப் யாதவ் ஒரு விக்கெட் வீழ்த்தினர். முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து 1-1 என வெஸ்ட்இண்டீஸ் சமன் செய்த நிலையில் 3வது மற்றும் கடைசி போட்டி நாளை மறுநாள் தாரூபா ஸ்டேடியத்தில் நடைபெற பெற உள்ளது.

தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது: எங்களின் திறமைக்கு ஏற்ப பேட்டிங் செய்யவில்லை. முதல் போட்டியை விட பிட்ச் பேட்டிங்கிற்கு சிறப்பாக இருந்தது. கில்லை தவிர மற்ற அனைவரும் பீல்டர்களை நோக்கி அடித்து அவுட் ஆனது ஏமாற்றம். ஆனால் இன்னும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். தொடக்க வீரர்கள் சிறப்பாக பேட் செய்தனர். குறிப்பாக இஷான் நன்றாக ஆடினார். தாகூர் பந்துவீச்சில் எங்களை மீட்டெடுத்தார். ஹோப் மற்றும் கார்டி சிறப்பாக பேட்டிங் செய்து வெற்றி பெற்றனர். உலகக் கோப்பைக்கு தயாராக நான் அதிக ஓவர்கள் வீச வேண்டும். ஆனால் நான் முயலை போல் வேகமாக தயாராகாமல், ஆமையை போல் மிதமான வேகத்தில் உலகக்கோப்பைக்கு தயாராகிறேன் என்று நினைக்கிறேன். உலகக்கோப்பைத் தொடரில் அனைத்தும் சரியாக நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தொடர் 1-1 என உள்ளதால், 3வது ஒருநாள் போட்டி வீரர்களுக்கும், ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான போட்டியாக இருக்கும், என்றார்.

தொடரை வெல்வோம்: ஷாய் ஹோப் நம்பிக்கை: ஆட்டநாயகன் விருதுபெற்ற வெ.இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் கூறியதாவது: அணி வெற்றிபெறும் போது நான் அரைசதம், சதம் அடித்திருந்தால் மகிழ்ச்சியாக இருப்பேன். இந்த ஆடுகளம் ரன் எடுக்க கடினமாக இருக்கும் போது, அதிரடியாக தொடங்க வேண்டும். இந்தியாவின் சிறந்த பவுலர்களை எதிர்கொண்டு வெற்றியை அடைந்திருக்கிறோம். இந்த வெற்றியால் மனம் நிம்மதியடைகிறது. அடுத்த போட்டியிலும் வெற்றியை பெற்றால், தொடரையும் கைப்பற்ற முடியும். இந்தியா கூடுதல் ஆக்ரோஷத்துடன் களமிறங்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே வெற்றிபெற இன்று பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் செயல்பட்டதை போல் தொடர்ந்து செயல்பட வேண்டும். நிச்சயம் மூன்றாவது போட்டியிலும் வெல்வோம்’’ என்றார்.

The post 6 விக்கெட் வித்தியாசத்தில் வெ.இண்டீஸ் வெற்றி; எங்களின் திறமைக்கு ஏற்ப பேட்டிங் செய்யவில்லை: இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டி appeared first on Dinakaran.

Tags : West Indies ,Hardik Pandya ,Bridgetown ,India ,Dinakaran ,
× RELATED வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இலங்கையில்...