சென்னை: நான் மக்களை சந்தித்து பதவிக்கு வந்தேன். உங்கள் மகன் ஜெய்ஷா எப்படி பதவிக்கு வந்தார் என்று அமித்ஷாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக இளைஞர் அணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு திமுக இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். அப்போது, அவர் பேசியதாவது: ராமேஸ்வரத்துக்கு நேற்று (நேற்று முன்தினம்) வந்த அமித்ஷா பேசிட்டு போய் இருக்கிறார். என்னை பற்றி எல்லாம் பேசியிருக்கிறார். என்னை முதல்வராக்குவது மட்டும் தான் தலைவர் மு.க.ஸ்டாலினின் லட்சியம் என்று கூறியிருக்கிறார்.
நான் மக்களை சந்தித்து தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகி, அமைச்சர் பொறுப்புக்கு தலைவரின் வழிகாட்டுதலின் பேரில் அந்த பொறுப்பை ஏற்றுள்ளேன். நான் ஒன்னே ஒன்னு மட்டும் அமித்ஷாவிடம் கேட்கிறேன். உங்கள் மகன் எப்படி பிசிசியின் தலைவரானார். உங்கள் மகன் எத்தனை கிரிக்கெட் போட்டியில் விளையாடி உள்ளார். எத்தனை ரன் அடித்துள்ளார்? ஏதாவது நான் கேட்டு இருக்கிறேனா? இது மட்டுமா, ஜெய் ஷா ஒரு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தின் மதிப்பு கடந்த 2014ல் வெறும் ரூ.75 லட்சமாக இருந்தது. ஆனால் இப்போது பார்த்தால் அது ரூ.130 கோடியாக அதிகரித்துள்ளது. இத்தனை குறுகிய காலத்தில் இந்த அசுர வளர்ச்சி எப்படி வந்தது. இதற்கு நமது ஒன்றிய உள்துறை அமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார். மகனைப் பற்றிப் பேச முடியாமல் அவர் என்னைப் பற்றி மட்டும் பேசியிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.
The post நான் மக்களை சந்தித்து பதவிக்கு வந்தேன், உங்கள் மகன் ஜெய்ஷா எப்படி பதவிக்கு வந்தார்? அமித்ஷாவுக்கு உதயநிதி கேள்வி appeared first on Dinakaran.