×

கொரோனாவால் இறந்த மகனுக்கு ரூ.10 லட்சத்தில் கோயில் கட்டிய ஓய்வுபெற்ற போலீஸ்காரர்: கிராமமக்கள் நெகிழ்ச்சி

ராமநாதபுரம் : கடலாடி அருகே கொரோனாவால் இறந்த மகனுக்கு ஓய்வு பெற்ற போலீஸ்காரர் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தியது கிராமமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே ஒருவானேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராமமுர்த்தி ஓய்வு பெற்ற எஸ்.ஐ ஆவார். மனைவி திலகவதி. இந்த தம்பதியினருக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உண்டு. முத்த மகன் வேலாயுதம் பொறியாளரான இவர் சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி மனைவி ஜமுனாதேவி, கவின்குமார், அருண்மொழி என இரண்டு மகன்கள் உண்டு 37 வயதான வேலாயுதம் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். சிறு வயது முதல் வள்ளலார் சுவாமியின் தீவிர பக்தரான வேலாயுதத்தை மயானத்தில் அடக்கம் செய்யாமல், ஆன்மீக முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு சாமியார்கள் முறைப்படி ஒருவானேந்தல் கிராமத்திலுள்ள சொந்தமான விவசாய இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

மகன் இறந்தது முதல் நாள்தோறும் அவரது நினைவிடத்தில் விளக்கேற்றி வந்துள்ளார் ராமமுர்த்தி, அப்போது கோயில் கட்ட முடிவு செய்து ஆகம விதிப்படி விக்கிரகம் இன்றி ஜீவ சமாதியாக கருவரை அமைத்து சுமார் ரு.10லட்சம் மதிப்பில் கோயிலும் கட்டினார். கோயில் பணி முடிந்தவுடன் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து வியாழக்கிழமை மாலையில் கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் தொடங்கப்பட்டு, நேற்று காலையில் பூர்ணஹீதியுடன் வேத மந்திரங்களுடன் கும்பாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மகனுக்கு தந்தை கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய சம்பவம் கடலாடி பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post கொரோனாவால் இறந்த மகனுக்கு ரூ.10 லட்சத்தில் கோயில் கட்டிய ஓய்வுபெற்ற போலீஸ்காரர்: கிராமமக்கள் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Corona ,Ramanathapuram ,Maradi ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரத்தில் கலவரம் தடுப்பு குறித்து ‘மாப் ஆபரேஷன்’