×

திருக்கனூர் அருகே இளம்பெண் சாவில் திடீர் திருப்பம் தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது

*மாமனாரும் சிறையில் அடைப்பு

புதுச்சேரி : திருக்கனூர் அருகே இளம்பெண் தற்கொலை சம்பவத்தில், வரதட்சணை கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் மற்றும் மாமனாரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி, திருக்கனூர், ரோஜா நகர் கே.மணவெளியை சேர்ந்தவர்கள் அரவிந்த் (26). இவரது மனைவி மோனிகா (23). இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால், தம்பதியிடையே அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.

இது குறித்து கடந்த 25ம்தேதி மாலை மோனிகா அரசூரில் வசிக்கும் தாய் உண்ணாமலையிடம் கணவருக்கும், தனக்கும் இடையே நடக்கும் பிரச்னை குறித்து மோனிகா கூறியதாக தெரிகிறது. அப்போது நாளை நேரில் வந்து பார்ப்பதாக உண்ணாமலை தெரிவித்தார். மறுநாள் தனது மகளுக்கு செல்போன் மூலமாக பலமுறை தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த உண்ணாமலை திருக்கனூரில் உள்ள தனது மூத்த மகள் சரண்யாவிடம் கூறியதால் அவர் மோனிகாவை வீட்டுக்கு சென்று பார்த்தபோது கதவுமூடி இருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது, தனது தங்கை கல்யாண புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்த திருக்கனூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தாசில்தார் விசாரணையும் நடந்து வருகிறது. மேலும் மோனிகாவின் செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக மோனிகா 2 வீடியோக்களை பதிவு செய்து தாயாருக்கு அனுப்பியது தெரியவந்தது. அதில், தனது கணவர் அரவிந்த் குழந்தை இல்லை என்பதற்காக தன்னை தலையில் அடித்ததாகவும், நான் வேறு திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் காண்பிக்கிறேன்.

உன் பொருட்கள் அனைத்தையும் எடுத்து கொண்டு செல் எனக்கூறி அடித்ததாகவும், இதனால் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். தனது கணவரை சும்மா விடக் கூடாது. அக்கா மற்றும் தந்தையை நன்றாக பார்த்து கொள்ளும்படியும் அழுதபடியே முறையிடும் காட்சிகள் பதிவாகி இருந்தது. தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கணவர் அரவிந்த், அவரது தந்தை பொன்னுசாமி ஆகியோர் மீது, வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர். மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

கடிதத்தில் எழுதியிருப்பது என்ன?

தனது கணவரின் சித்ரவதையால் தூக்குபோட்டு இறந்த மோனிகா, தனது தாய்க்கு வீடியோ பதிவிட்டு அனுப்பியிருந்ததோடு, டைரியில் ஒரு கடிதமும் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், என் இறப்புக்கு காரணம் என் கணவர். அவரது அம்மா, அப்பா, தம்பி, என்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி அடிக்கிறாங்க. கல்யாணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகப்போகுது, குழந்தை பிறக்கலன்னு என் கணவர் என்னை டெய்லி அடிக்கிறார். என்னால இதுக்குமேல உயிரோட இருக்க முடியல. இவங்க யாரையும் சும்மா விடாதீங்க. என எழுதியிருந்தார்.

The post திருக்கனூர் அருகே இளம்பெண் சாவில் திடீர் திருப்பம் தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chavil ,Thirukanur ,Puducherry ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு