×

மாமூல் தர மறுத்த கடைக்காரர் அடித்து கொலை

பல்லாவரம்: பழைய பல்லாவரம், கண்ணபிரான் தெருவை சேர்ந்தவர் மாதவன் (42). இவர், கச்சேரி மலை ரோடு பகுதியில் கோழி இறைச்சி கடை வைத்து நடத்தி வந்தார். இவரது கடைக்கு கடந்த 23ம் தேதி வந்த வாலிபர், நான் இந்த பகுதியில் பிரபல ரவுடி . அதனால் எனக்கு தினமும் 50 ரூபாய் மாமூல் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளார். மாதவன் பணம் கொடுக்க மறுத்ததால், அந்த வாலிபர் மாதவன் தலையில், சரமாரியாக கற்களால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். இதில் பலத்த படுகாயமடைந்த மாதவனை, அக்கம் பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாதவனை கற்களால் தாக்கிய திரிசூலம், பச்சையம்மன் நகர் பகுதியை சேர்ந்த ரவுடி ஐயப்பன் (22) என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மாதவன், நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாமூல் தர மறுத்த கடைக்காரர் அடித்து கொலை appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,Madhavan ,Kannapiran Street, Old Pallavaram ,Kacheri Hill Road ,
× RELATED இன்ஜினியர் வீட்டில் 60 சவரன் கொள்ளை