×

அர்ச்சகர் நியமனத்தில் ஜாதிக்கு எந்த பங்கும் இல்லை, யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம்: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை: அர்ச்சகர் நியமனத்தில் ஜாதிக்கு எந்த பங்கும் இல்லை, யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் நியமனத்துக்கான விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி கடந்த 2018ம் ஆண்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்த அறிவிப்பை எதிர்த்து அதே கோயிலில் பணிபுரிந்து வந்த சுப்பிரமணிய குருக்கள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சுகவனேஸ்வரர் கோயில் ஆகமத்தின் அடிப்படையிலானது. இந்த அறிவிப்பில் கூறப்பட்ட தகுதிகள் ஆகமத்தின் அடிப்படையில் இல்லை என்று மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்து அறநிலையத்துறை சார்பில், குறிப்பிட்ட கோயில்களில் பின்பற்றக்கூடிய மரபை முடிவு செய்ய அந்த கோயில் அர்ச்சகரிடம் இருந்து தகுதிச் சான்றிதழ் பெற்று விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று வாதிட்டார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம். குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதில் ஜாதிக்கு எந்த பங்கும் இல்லை என்றும் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் முதன்மை அமர்வு ஆகம கோயில்கள் எது? ஆகமம் பின்பற்றாத கோயில்கள் எது? என்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். குழு அறிக்கை அளிக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை என்றும் அந்தந்த கோயில்களில் சொத்து பதிவேட்டில் கூறப்பட்ட ஆகமத்தில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்கலாம் என்றும் தீர்ப்பளித்திருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து மனுதாரர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி ஆதிகேசலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், ஆகம கோயில்களில் அர்ச்சகர்கள் பரம்பரையாக தான் நியமிக்க வேண்டும் என்றும் தனி நீதிபதியின் உத்தரவு ஏற்கனவே உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள ஷேஷமால் வழக்குக்கு எதிரானதாக உள்ளது என்றும் வாதிட்டார். எனவே இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, இதே மனுதாரர் தான் ஆகம கோயில்கள் எது? ஆகமம் பின்பற்றாத கோயில்கள் எது? என்பது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற்றுள்ளதாகவும், தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 2,405 அர்ச்சகர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அது நிரப்பப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், குழு இன்னும் அறிக்கை சமர்ப்பிக்காத நிலையில், சேலம் சுகவனேஸ்வரர் கோயில் ஆகம கோயில் தான் என எப்படி முடிவு செய்தீர்கள்? என கேள்விகளை முன்வைத்தனர். தொடர்ந்து இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து இந்து அறநிலையத்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எந்தவொரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

The post அர்ச்சகர் நியமனத்தில் ஜாதிக்கு எந்த பங்கும் இல்லை, யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம்: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து appeared first on Dinakaran.

Tags : Cajadi ,Archakar ,Chennai High Court ,Chennai ,Jaati ,Dinakaran ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...