×

திருக்கனூர் அருகே வீடு புகுந்து தாய், மகள் மீது கொலைவெறி தாக்குதல்

*மர்ம நபருக்கு போலீஸ் வலை

திருக்கனூர் : திருக்கனூர் அருகே வீடு புகுந்து தாய், மகளை மர்ம நபர் ஒருவர் இரும்பு ராடால் தாக்கிவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருக்கனூர் அருகே உள்ள செல்லிப்பட்டு பொன்னியங்கிரி தெருவை சேர்ந்தவர் கலியவரதன் (45), விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி தமிழரசி (35), மகள் சாந்தி (17). நேற்று கலியவரதன் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் வீட்டின் பின்புறம் தமிழரசியும், சாந்தியும் சமையல் செய்துள்ளனர்.

அப்போது, மர்ம நபர் ஒருவர் வீட்டின் உள்ளே வருவது போல் சத்தம் கேட்டுள்ளது. உடனே தமிழரசி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, மர்மநபர் ஒருவர் முகத்தை கைக்குட்டையால் மூடியபடி நின்று கொண்டிருந்தார். அந்த நபரிடம் யார் நீங்கள் என்று தமிழரசி கேட்டுள்ளார். உடனே அந்த நபர் கையில் வைத்திருந்த இரும்பு ராடால் தமிழரசியின் தலையில் ஓங்கி அடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு மகள் சாந்தியும் ஓடிவந்து தடுக்க முயற்சித்தார்.

அப்போது, அந்த நபர் சாந்தியையும் இரும்பு ராடால் தாக்கினார். இதில் தாய், மகள் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை பார்த்தவுடன் அந்த மர்ம நபர் வீட்டின் பின்புறமாக தப்பிச் சென்றார். அப்போது, அவர் வீட்டின் முன்புறம் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை அதே இடத்தில் விட்டுவிட்டு ஓடினார். இதையடுத்து, தமிழரசி, சாந்தி ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்து திருக்கனூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தாய், மகளை தாக்கிவிட்டு சென்ற மர்ம நபர் குறித்து விசாரித்தனர். மேலும், வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, அந்த வாகனம் அந்த மர்ம நபருக்கு சொந்தமான வண்டியா அல்லது திருட்டு வண்டியா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் மர்ம நபரை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். திருக்கனூர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து தாய், மகளை மர்ம நபர் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post திருக்கனூர் அருகே வீடு புகுந்து தாய், மகள் மீது கொலைவெறி தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Tirukanur ,Thirukkanur ,
× RELATED திருக்கனூர் அருகே கஞ்சா செடிகளை பயிரிட்டு விற்ற சிறுவன் உள்பட 5 பேர் கைது