செங்கல்பட்டு: செங்கல்பட்டு பேருந்து நிலையம் அருகே, வாலிபர் ஒருவர் வலிப்பு நோயால் திடீரென மயங்கி விழுந்தார். போலீசார் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தாம்பரம் அருகே இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (32). இவர், நேற்று முன்தினம் மாலை செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென சதீஷுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்து அங்கு பணியில் இருந்த போக்குவரத்து மற்றும் தனிப்பிரிவு போலீசார் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
சில நிமிடங்களுக்கு பிறகு சதீஷுக்கு சுயநினைவு திரும்பியது. இதையடுத்து, தன்னை காப்பாற்றிய போலீசாருக்கு சதீஷ் கண்ணீர் மல்க இருகரம் கூப்பி நன்றி தெரிவித்தார். பின்னர், அவரிடம் போலீசார் விசாரித்ததில், ‘தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல வந்தபோது, புதிய பேருந்து நிலையம் அருகே வலிப்பு நோயால் மயங்கி விழுந்தேன்.’’ என தெரிவித்தார். பின்னர், அவரை போலீசார் பத்திரமாக அனுப்பி வைத்தனர். போலீசாரின் மனிதநேயமிக்க இச்செயலுக்கு, காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.
The post செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் வலிப்பு நோயால் மயங்கி விழுந்த வாலிபர் முதலுதவி சிகிச்சை அளித்த போலீசார்: பொதுமக்கள் பாராட்டு appeared first on Dinakaran.