×

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான மேல்முறையீடு மனுக்கள் மீதான வழக்கு விசாரணையை ஆக.1ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில், அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை ஆகஸ்ட் 1ம் தேதி நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு மீதான மேல்முறையீட்டு வழக்கில் 2ம் நாளாக விசாரணை நடைபெற்றது. செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார்.

அப்போது, அமலாக்கத் துறைக்கு கைது செய்யும் அதிகாரம் இருந்தாலும், கைது செய்யப்படும் நபரை 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைத்திருக்க முடியாது. கைது செய்யப்படும் நபரை அமலாக்கத்துறை காவலில் எடுக்க வேண்டும் என்றால் அதன் அதிகாரிகளை காவல் அதிகாரிகளுக்கு இணையாக கருத வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும். அவ்வாறு தீர்ப்பளிக்கும் பட்சத்தில் குற்றவியல் நடைமுறை சட்ட அதிகாரங்கள் அனைத்தும் அமலாக்கத்துறை கிடைத்துவிடும் என்று கபில்சிபல் தெரிவித்தார்.

மேலும் சுங்க சட்டத்தின் படி கைது செய்யப்படு நபரை சுங்க அதிகாரிகள் காவலில் வைத்து விசாரிப்பதில்லை, போலீசார் தான் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர். கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்ற காவலில் இருக்கும்போது விசாரணை நடத்த எவ்வித தடையும் இல்லை. எனவே சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க எதுவும் அமலாக்கத் துறைக்கு தடையாக இல்லை. தமிழ்நாடு காவல் நிலையாணை விதிகளின்படி , கைது செய்யப்படும் நபர், நீதிமன்ற காவலுக்கு முன் அவரது வழக்கறிஞரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.

ஃபெரா வழக்கில் போலீஸ் காவல் விதிக்காமல் இருப்பதைப் போல பிஎம்எல்ஏ சட்டத்திலும் ஏன் விதிக்காமல் இருக்கக் கூடாது? என்று கேள்வி எழுப்பிய கபில்சிபல், சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என கூறினார். அரசியல் ரீதியான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம். சட்டரீதியான வாதங்களை மட்டுமே முன் வைக்க வேண்டும் என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.

2002ம் ஆண்டு தொடங்கி 300 பேரை மட்டுமே இதுவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது என்றும் துஷார் மேத்தா குறிப்பிட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. ஆகஸ்ட் 1ம் தேதி மதியம் ஒரு மணி நேரத்திற்குள் வாதங்களை நிறைவு செய்ய செந்தில் பாலாஜி தரப்புக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

The post அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான மேல்முறையீடு மனுக்கள் மீதான வழக்கு விசாரணையை ஆக.1ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Supreme Court ,Delhi ,Megala ,Chendhil Balaji ,
× RELATED சொலிசிட்டர் ஜெனரல் காலஅவகாசம்...