மும்பை: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியின் அணி எப்படி இருக்கும் என்பது குறித்து முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியதாவது:-“ஓபனர்கள் இடத்தில் சந்தேகமே இல்லை. ரோஹித் ஷர்மா, சுப்மன் கில் ஆகியோர்தான் களமிறங்குவார்கள். அதேபோல், கோஹ்லியின் மூன்றாவது இடத்தை பறிக்கும் அளவுக்கு இந்திய அணியில் யாரும் இல்லை. சூர்யகுமார் யாதவுக்கு நான்காவது இடத்தை கொடுக்கமாட்டார்கள் எனக் கருதுகிறேன். அவர் பினிஷர் இடத்தில் சிறப்பாக செயல்படக் கூடியவர். டி20 ஆட்டத்தை வெளிப்படுத்தும் இடத்தில் தான் இவரை களமிறக்க முடியும்.
ஆகையால், 4வது இடத்தில் சஞ்சு சாம்சன்தான் களமிறக்கப்படுவார். ஹர்திக் பாண்டியாவுக்கு 5வது இடத்தையும், சூர்யகுமார் யாதவுக்கு 6வது இடத்தையும் கொடுப்பார்கள் என நினைக்கிறேன். பந்துவீச்சாளர்கள் இடத்தில் ரவீந்திர ஜடேஜா, அக்ஷர்படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், உம்ரான் மாலிக் ஆகியோர் விளையாட வாய்ப்புள்ளது’’ என்றார். வாசிம் ஜாபர் கணித்த அணியில் இஷான் கிஷனின் பெயர் இடம்பெறவில்லை. சஞ்சு சாம்சனுக்குத்தான் இடம் கொடுத்துள்ளார். சாம்சன் 2017ம் ஆண்டு முதல் இந்திய அணியில் இடம்பெற்று வந்தாலும், மொத்தமே 11 போட்டிகளில்தான் விளையாடியிருக்கிறார்.
இதில், 10 இன்னிங்ஸ்களில் 330 ரன்களை 66 சராசரியில் அடித்திருக்கிறா்ர். அதில், இரண்டு அரை சதங்கள் அடங்கும். குறிப்பாக, கடந்த வருடத்தில் போர்ட் ஆப் ஸ்பெய்னில் சாம்சன் அரை சதம் அடித்து, இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய உத்தேச லெவன் அணி (வாசிம் ஜாபர் கணிப்பு): ரோஹித் ஷர்மா, சுப்மன் கில், விராட் கோஹ்லி, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், உம்ரான் மாலிக்.
The post வெஸ்ட் இண்டீசுடன் முதல் ஒரு நாள் போட்டி; சஞ்சு சாம்சனுக்கு இடம்: வாசிம் ஜாபர் கணிப்பு appeared first on Dinakaran.