கலசபாக்கம், ஜூலை 27: துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப பதிவு முகாமை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ₹1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், அண்ணா பிறந்த நாளான வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்காக முதல் கட்டமாக ₹7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தும் வகையில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இதற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியன குடும்ப அட்டைவாரியாக அந்தந்த பகுதியில் உள்ள நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், துரிஞ்சாபுரம் ஒன்றியம், மங்கலம் ஊராட்சி, கீழ்பாலானந்தல் கிராமத்தில் நேற்று இந்த திட்டத்தில் நடந்த விண்ணப்ப பதிவு செய்யும் முகாமை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, தகுதியான அனைத்து நபர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைத்திட அதிகாரிகள் கவனத்துடன் செயல்பட வேண்டும். தகுதியான நபர்கள் யாரும் விடுபடக்கூடாது என அறிவுரை வழங்கினார். மேலும், முகாமிற்கு வந்திருந்த குடும்ப தலைவிகளிடம், இத்திட்டத்தை யார் கொண்டு வந்தது என கேட்டபோது முத்தான திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அப்போது, ஒன்றியக்குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வி.பி.அண்ணாமலை, பொதுக்குழு உறுப்பினர் பாலு, மாவட்ட கவுன்சிலர் சகாதேவன், ஒன்றிய கவுன்சிலர் பிரபாகரன், பிடிஓ கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
The post மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப பதிவு முகாம் துணை சபாநாயகர் ஆய்வு துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் appeared first on Dinakaran.