×

மணிமங்கலம் ஏரிக்கரை சாலையில் மின் கம்பங்களை மாற்றும் பணி தீவிரம்

ஸ்ரீபெரும்புதூர்: தினகரன் செய்தி எதிரொலியால், மணிமங்கலம் ஏரிக்கரை பகுதியில் சாலை விரிவாக்கம் பணிக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை மாற்றியமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை – பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலை, சென்னை – திருச்சி ஜிஎஸ்டி சாலையை இணைக்கும் சாலையாக ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் சாலை உள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கட்சிப்பட்டு, பிள்ளைப்பாக்கம், நாவலூர், கொளத்தூர், மலைப்பட்டு, சேத்துப்பட்டு, புஷ்பகிரி, மணிமங்கலம், முடிச்சூர், பெருங்களத்தூர் வழியாக தாம்பரம் ஜிஎஸ்டி சாலையை இணைக்கிறது.

மேற்கண்ட பகுதியை சார்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் என தினமும் 1500க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். தற்போது, தாம்பரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை மாநகர பேருந்து தடம் எண் 583சி, 583டி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதனால், வாகன நெரிசலும், அடிக்கடி விபத்தும் நடப்பதால் இரு வழிச்சாலையான இந்த சாலையை நான்கு வழி சாலையாக அகலப்படுத்த நெடுஞ்சாலை துறை சார்பில் திட்டமிடபட்டது.

முதல் கட்டமாக, ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பிள்ளைபாக்கம் வரை 3.5 கிலோமீட்டர் சாலையை 4 வழி சாலையாக 3 ஆண்டுகளுக்கு முன்பு அகலப்படுத்தபட்டது. தற்போது, 2ம் கட்டமாக பிள்ளைப்பாக்கம் முதல் மணிமங்கலம் வரை 8.4 கிலோமீட்டர் நீளத்திற்கு அகலபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மணிமங்கலம் ஏரிக்கரை பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகள் அகற்றப்படாமல் உள்ளது.

இதனால், மேம்பாலம் கட்டும் பணியும், சாலை அமைக்கும் பணியும் கடந்த ஒரு மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், சாலை விரிவாக்கம் செய்யும் பணிக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை அகற்றித்தர வேண்டும் என்று படப்பை துணை மின் நிலைய அதிகாரிகளுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 24ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, நேற்று முன்தினம் மின்சார வாரிய அதிகாரிகள் கிரேன் உதவியுடன் மின் கம்பங்களை மாற்றி அமைத்து வருகின்றனர்.

The post மணிமங்கலம் ஏரிக்கரை சாலையில் மின் கம்பங்களை மாற்றும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Manimangalam ,Sriperumbudur ,Dinakaran ,
× RELATED சென்னையில் மது விற்பனை செய்தவரிடம் பணம் பறிப்பு: காவலர்களிடம் விசாரணை