×

தமிழ்நாடு அரசின் நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: வேளாண்மை உற்பத்தி ஆணையர் அறிவிப்பு

சென்னை: வேளாண் பெருமக்களின் நலனுக்காக கடந்த மூன்றாண்டுகளாக வேளாண் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு உழவர் நலத்திட்டங்களை அறிவித்து தமிழ்நாடு அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

அங்கக வேளாண்மைக்கு அரசு அதிக முக்கியத்துவம்:-
நமது பண்ணையின் மண்வளத்தை பாதுகாத்து, தமிழ்நாட்டு மக்களுக்கு ஆரோக்கியமான உணவு அதிக அளவில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை, 2023-ஐ தமிழ்நாடு முதலமைச்சர் 14.03.2023 அன்று வெளியிட்டார்கள். அதன் தொடர்ச்சியாக அரசு அங்கக வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக, பல்வேறு திட்டங்களில் சிறப்புச் சலுகை வழங்கிவருகிறது.

நம்மாழ்வார் விருதுக்கான அறிவிப்பு:-
நடப்பு 2023-24 ஆம் ஆண்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை – உழவர் நலத் துறை அமைச்சர் அவர்கள் பிறவற்றுடன் கீழ்க்காணும் அறிவிப்பினை வெளியிட்டார்கள்:-
”அங்கக வேளாண்மையில் திரு நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அங்கக வேளாண்மையில் ஈடுபடுவதோடு, அதனை ஊக்குவித்து பிற அங்கக விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் “நம்மாழ்வார்” பெயரில் விருது வழங்கப்படும். இவ்விருது ஐந்து இலட்சம் ரூபாய் பணப்பரிசு, பாராட்டுப் பத்திரத்துடன் குடியரசு தினத்தன்று வழங்கப்படும்” மேற்காணும் அறிவிப்பினைத் தொடர்ந்து, இதற்கான நிதியினை ஒப்பளித்து ஆணை வெளியிட்டுள்ளது.

பங்கேற்பதற்கான தகுதிகள் :
விருதுக்கு விண்ணப்பிக்கும் விவசாயி குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பில் அங்கக வேளாண்மை முறைகளை பின்பற்றி சாகுபடி செய்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டு, முழு நேர அங்கக விவசாயியாக இருத்தல் அவசியமாகும். மேலும், அங்கக வேளாண்மைக்கான சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

தேவையான ஆவணங்கள் :
ஆதார் அட்டை நகல்,
சிட்டா,
அடங்கல் மற்றும் அங்கக வேளாண்மை சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

பரிசுத்தொகை குறித்த விவரம்:
வெற்றிபெறும் மூன்று விவசாயிகளுக்கு நம்மாழ்வர் விருதுடன் ரொக்கப்பரிசும், சான்றிதழும், பதக்கமும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் குடியரசு தினத்தன்று வழங்கப்படும். முதல் பரிசாக, ரூ.2.50 இலட்சத்துடன், ரூ.10,000/- மதிப்புடைய பதக்கமும், இரண்டாம் பரிசாக, ரூ.1.50 இலட்சத்துடன், ரூ.7,000/- மதிப்புடைய பதக்கமும், மூன்றாம் பரிசாக, ரூ.1.00 இலட்சத்துடன், ரூ. 5,000/- மதிப்புடைய பதக்கமும் வழங்கப்படும்.

நம்மாழ்வார் விருதுக்கு பதிவு செய்யும் முறை:
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், உழவன் செயலி மூலமாகவோ அல்லது www.tnagrisnet.tn.gov.in இணையதளம் மூலமாகவோ, தேவையான விபரங்களை அளித்து முன்பதிவு செய்து கொள்ளலாம். பதிவுக் கட்டணமாக ரூ.100/- மட்டும் அரசுக்கணக்கில் செலுத்தி, 30.11.2023க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, அந்தந்த வட்டார வேளாண்மைத்துறை அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் அதிக விவசாயிகள் அங்கக வேளாண்மையில் ஈடுபட வேண்டும் ‘என்பதற்காக, அங்கக வேளாண் வரலாற்றில் பெரும்பங்காற்றிய திரு. நம்மாழ்வார் அவர்களின் பெயரில் புதிய விருதினை அறிமுகம் செய்து, அரசு அங்கக விவசாயிகளை கௌரவிக்கும் இத்திட்டத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு, அங்கக வேளாண்மையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

The post தமிழ்நாடு அரசின் நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: வேளாண்மை உற்பத்தி ஆணையர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nadu ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்