×

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11ம் வகுப்பில் பல பாடங்களில் தோல்வியடைந்தவர்கள் துணைத்தேர்வு எழுத கோர முடியாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11ம் வகுப்பு தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத் தேர்வு நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ஐகோர்ட் ரத்து செய்தது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11ம் வகுப்பில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தவர்களை, துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களை துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதில்லை எனவும் கூறி மாணவர்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, 11ம் வகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கு ஒருமுறை நடவடிக்கையாக துணைத்தேர்வு நடத்த வேண்டும் என்று கேந்திரிய வித்யாலயா சங்கதனுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, ‘அனைத்து பாடங்களிலும் வெற்றி பெற்ற மாணவர்களே அடுத்த வகுப்புக்கு செல்ல முடியும் என்று கேந்திரிய வித்யாலயா விதிகளில் கூறப்பட்டுள்ளது. எனவே, 11ம் வகுப்பு தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தது.

The post கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11ம் வகுப்பில் பல பாடங்களில் தோல்வியடைந்தவர்கள் துணைத்தேர்வு எழுத கோர முடியாது: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kendriya Vidyalaya Schools ,Chennai ,Kedriya Vidyalaya ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!