×

தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் சொகுசு கார் மோதி கம்பெனி ஊழியர் சாவு: தொழிலதிபரின் டிரைவர் கைது

சென்னை: தி.நகரில் பைக் மீது சொகுசு கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து விபத்து ஏற்படுத்திய பிரபல ஜவுளிக்கடை உரிமையாளரின் டிரைவரை போலீசார் கைது செய்தனர். கே.கே.நகரை சேர்ந்தவர் ரவிவர்மா (60), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு, தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து பெரியார் சிலை நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது, பின்னால் வந்த சொகுசு கார், எதிர்பாராத விதமாக ரவிவர்மா ஓட்டி வந்த பைக் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்த பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, உயிரிழந்த ரவிவர்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், விபத்து ஏற்படுத்திய கார், தி.நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையின் உரிமையாளருக்கு சொந்தமானது என்பதும், அதை டிரைவர் சம்சூதீன் (46) என்பவர் ஓட்டி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து, ஜவுளிக்கடை உரிமையாளரின் கார் டிரைவர் சம்சூதீனை கைது செய்து, சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.

The post தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் சொகுசு கார் மோதி கம்பெனி ஊழியர் சாவு: தொழிலதிபரின் டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : D. Nagar North Osman Road ,Chennai ,D. Nagar ,North Usman Road ,Dinakaran ,
× RELATED வீட்டின் பூட்டை உடைத்து ரூ1 லட்சம், 15 கிலோ வெண்கலம் திருட்டு