புதுடெல்லி: டிஎன்ஏ மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது குறித்து காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. குறிப்பிட்ட வழக்குகளில் குற்றவாளிகள், பாதிப்புக்கு உள்ளானோா், விசாரணைக் கைதிகள், காணாமல் போனோா், அடையாளம் காண முடியாதோா் உள்ளிட்டோரின் அடையாளங்களைக் கண்டறிய டிஎன்ஏ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதை ஒழுங்குபடுத்தும் நோக்கில் டிஎன்ஏ மசோதா கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதவை திரும்பப் பெறுவதாக நேற்று முன்தினம் கடும் அமளிக்கு இடையே மக்களவையில் ஒன்றிய அரசு அறிவித்தது.
இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டரில், ‘‘இந்த மசோதாவை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைக்கான நிலைக்குழு விரிவாக ஆய்வு செய்து, சில விதிகள் தவறாக பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய பல முக்கிய திருத்தங்களை பரித்துரைத்தது. இப்போது ஒன்றிய பாஜ அரசோ, இதில் உள்ள பெரும்பாலான விதிகள் ஏற்கனவே குற்றவியல் நடைமுறை அடையாள சட்டத்தில் இருப்பதால் டிஎன்ஏ மசோதா தேவையில்லை என அமைதியாக வாபஸ் பெற்றுள்ளது. ஆனால் உண்மையான காரணம் என்னவெனில், நிலைக்குழு பரிந்துரைத்த விரிவான பாதுகாப்புகளை பாஜ அரசு விரும்பவில்லை. குழுவின் அறிக்கையை முன்கூட்டியே தர அழுத்தம் தந்த நிலையில், இப்போது அதை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. எனவே, அரசின் டிஎன்ஏ மசோதாவை விமர்சித்தவர்களின் அச்சம் இப்போது நியாயமாகி உள்ளது’’ என்றார்.
* நிர்வாணப்படுத்தப்பட்ட பெண்களை சந்தித்தார் சுவாதி மாலிவால்
மணிப்பூரில் நிர்வாண பேரணி நடத்தப்பட்ட பெண்களை டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் நேற்று சுராசந்த்பூர் சென்று சந்தித்து பேசினார். அவர்களது உறவினர்களையும் சந்தித்து நடந்த விவரங்களை கேட்டறிந்தார். அப்போது கலவர கும்பலால் இதே போன்று பாதிக்கப்பட்ட ஏராளமான பெண்கள் சுவாதி மாலிவாலை சந்தித்து தங்களுக்கு நடந்த அவலங்களை எடுத்து கூறினார்கள். அதன்பின்னர் மணிப்பூர் கவர்னரையும் அவர் சந்தித்தார். அதன்பின் சுவாதிமாலிவால் கூறுகையில்,’ டெல்லியில் இருந்து மணிப்பூர் வந்து பாதிக்கப்பட்ட பெண்களை நான் சந்தித்து உள்ளேன். முதல்வர் பிரேன்சிங் ஏன் இதுவரை சந்திக்கவில்லை. அவர் பதவி விலக வேண்டும்’ என்றார்.
The post டிஎன்ஏ மசோதாவை திரும்ப பெற்றதன் காரணம் என்ன? ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி appeared first on Dinakaran.