×

பட்டாசு ஆலை விபத்தில் 2 பெண்கள் பரிதாப பலி

விருதுநகர்: சிவகாசி அருகே நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பெண்கள் பலியாகினர். விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டி பகுதியில் சிவகாசியை சேர்ந்த சண்முகையாவுக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு ரோல் கேப், கம்பி மத்தாப்பு உள்ளிட்ட சிறிய வகை பட்டாசுகள் தயார் செய்யும் பணியில் 40 அறைகளில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஆலையில் ரோல்கேப் வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ரசாயன கலவையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த தாயில்பட்டி அருகே மண்குண்டாம்பட்டியை சேர்ந்த பானுமதி (37), சிவகாசி அருகே விஸ்வநத்தத்தை சேர்ந்த முருகலட்சுமி (35) ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர். தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து, சிவகாசி அருகே கீழகோதைநாச்சியார்புரத்தை சேர்ந்த போர்மேன் கண்ணனை (42) கைது செய்தனர்.

* குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் முதல்வர் உத்தரவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், தாயில்பட்டியில் வெடிபொருள் தொழிற்சாலையில் நடந்த விபத்தில் முருகேஸ்வரி, பானு ஆகியோர் உயிரிழந்த துயரமான செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிப்பதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

The post பட்டாசு ஆலை விபத்தில் 2 பெண்கள் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Sivakasi ,Virudhunagar District ,Vembakota ,
× RELATED தென்னங்கன்றுகள் நடுவதற்கான வழிமுறைகள்: வேளாண்துறை விளக்கம்