×

வந்தே பாரத் ரயில்களை தென்னிந்தியாவில் ஏன் அதிகளவில் இயக்கவில்லை: நாடாளுமன்றத்தில் வைகோ கேள்வி

சென்னை: வந்தே பாரத் ரயில்களை தென்னிந்தியாவில் அதிகமாக இயக்காததன் காரணம் என்ன என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தெற்கு பகுதியில் அதிகமான வந்தே பாரத் ரயில்களை இயக்காததற்கான காரணங்கள் என்ன, தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் எதிர்காலத்தில் இதுபோன்ற ரயில்களை இயக்க அரசு பரிசீலிக்குமா என கேள்விகளை எழுப்பினார்.

இதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறிய பதில்: 2023 ஜூலை மாதத்தில், 22549/22550 கோரக்பூர் – லக்னோ வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் 12461/12462 ஜோத்பூர் சபர்மதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவை இந்திய ரயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், 25 ஜோடி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவைகள் இந்திய ரயில்வே மூலம் இயக்கப்படுகின்றன. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவைகளை அறிமுகப்படுத்துவது, இந்திய ரயில்வேயில் செயல்பாட்டு சாத்தியக்கூறுகள், போக்குவரத்து நடைமுறைகள் மற்றும் ரயில் பெட்டிகள் கிடைப்பது ஆகியவற்றுக்கு உட்பட்டது.

இந்திய ரயில்வே, மாநிலம், பிராந்திய வாரியாக ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தவில்லை, ஏனெனில் ரயில்வே நெட்வொர்க் மாநிலம், பிராந்திய எல்லைகளை கடந்து செல்கிறது. இருப்பினும், 20643/20644 சென்னை -கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் 20607/20608 சென்னை – மைசூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவை தமிழ்நாட்டில் அமைந்துள்ள நகரங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. 20833/20834 விசாகப்பட்டினம்-செகந்திராபாத் எக்ஸ்பிரஸ், 20701/20702 செகந்திராபாத்-திருப்பதி எக்ஸ்பிரஸ், 20633/20634 காசர்கோடு திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் மற்றும் 20661/20662 கே.எஸ்.ஆர் பெங்களூரு-தார்வார் எக்ஸ்பிரஸ் போன்றவை என நாட்டின் தெற்குப் பகுதியில் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.

The post வந்தே பாரத் ரயில்களை தென்னிந்தியாவில் ஏன் அதிகளவில் இயக்கவில்லை: நாடாளுமன்றத்தில் வைகோ கேள்வி appeared first on Dinakaran.

Tags : Vande Bharat ,South India ,VICO ,Parliament ,Chennai ,MDMK ,general secretary ,Vaiko ,
× RELATED வந்தே பாரத் லாபம் எவ்வளவு தெரியுமா?.. ஆர்டிஐ மனுதாரர் அதிருப்தி