×

திருமண சீர் கொடுக்காததால் பெற்ற மகளே போலீசில் புகார் காவல் நிலையம் முன் தாய் விஷம் குடித்து தற்கொலை

குலசேகரம் திருவட்டார் அருகே பெற்ற மகளே நகை, வீடு கேட்டு புகார் அளித்ததால் மனம் உடைந்த தாய் காவல்நிலையம் முன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். குமரி மாவட்டம் திருவட்டார் அருகே கண்ணணூர் கொல்லிக்கோட்டுவிளையை சேர்ந்தவர் சிம்சன். இவரது மனைவி லீமாராணி (42). இவர்களின் மகன் சாம்லன் (25), மகள் ஷாம்லி (23). பக்கத்து வீட்டை சேர்ந்த பிராங்கோவுக்கும் ஷாம்லிக்கும் கடந்த ஆண்டு டிசம்பரில் திருமணம் நடந்தது. பிராங்கோ வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் 15 நாட்களிலேயே அவருடன் ஷாம்லியும் சென்று விட்டார். திருமணத்தின்போது ஷாம்லிக்கு, வீட்டை எழுதி கொடுப்பதாக லீமாராணி வாக்குறுதி அளித்திருந்தாராம். அதன்படி எழுதி வைக்காததால் ஒரு வாரத்துக்கு முன்பு ஷாம்லி கணவருடன் சொந்த ஊர் வந்தவர், பெற்றோர் வீட்டுக்கு வரவில்லை.

இதுகுறித்து கேள்விப்பட்ட லீமாராணி, மகன் சாம்லனுடன், ஷாம்லியின் வீட்டுக்கு சென்றார். ஆனால் நீண்டநேரமாகியும் ஷாம்லி கதவை திறக்கவில்லை. இதனால் சாம்லன் காம்பவுண்டு சுவர் ஏறிச்சென்று கதவை தட்டினார். இதுபற்றி ஷாம்லி, எண் 100ஐ அழைத்து தன் வீட்டு கதவை மர்ம நபர்கள் தட்டுவதாக கூறி போலீசுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இதனால் மனவருத்தத்துடன் லீமாராணியும், சாம்லனும் திரும்பி சென்றனர். பின்னர் திருவட்டார் போலீசில் ஷாம்லி தரப்பில், தனது பெற்றோர் நகை மற்றும் வீட்டை எழுதித்தராமல் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டது.

இதனை கேள்விப்பட்டதும் லீமாராணி அதிர்ந்து போனார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராவதற்காக நேற்று முன்தினம் மதியம் லீமாராணி திருவட்டார் காவல் நிலையத்துக்கு சென்றார். ஆனால் காவல் நிலையத்திற்குள் நுழைவதற்கு முன் ஏற்கனவே தான் கொண்டு வந்திருந்த விஷத்தை குடித்துவிட்டார். உடனடியாக அவரை மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். பெற்ற மகளே தன் மீது புகார் அளித்ததால் லீமாராணி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருமண சீர் கொடுக்காததால் பெற்ற மகளே போலீசில் புகார் காவல் நிலையம் முன் தாய் விஷம் குடித்து தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kulasekaram ,Thiruvatar ,Thiruvattar ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...