×

விளையாட்டு விபரீதமானது நண்பர்கள் கண் முன் கிணற்றில் விழுந்த வாலிபர் பரிதாப சாவு

*ராஜபாளையம் அருகே பரிதாபம்

ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஊர்செட்டியார்பட்டி நடுமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் குத்தாலக்கனி மகன் மணிக்குமார் (26). தளவாய்புரம் பகுதியில் உள்ள தனியார் ஆடை தயாரிக்கும் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவர் தளவாய்புரம் மாரிமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள கிணற்றின் சுவரில் அமர்ந்து சக நண்பர்களுடன் நேற்று முன்தினம் பேசி கொண்டிருந்தார்.

அப்போது மணிக்குமார், நண்பர்களிடம், ‘‘நான் தவறி விழுந்தால் என்ன செய்வீர்கள்?’’ என கேட்டவாறு விளையாட்டாக சாய்ந்தார். அவரால் பேலன்ஸ் பண்ண முடியாததால் கிணற்றில் தவறி விழுந்தார்.மணிக்குமாருக்கு நீச்சல் தெரியும் என்பதால் வெளியே வந்து விடுவார் என நண்பர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதையடுத்து போலீசார், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த சேத்தூர் போலீசார் மற்றும் ராஜபாளையம் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். 24 மணி நேர போராட்டத்திற்கு பின், சகதியில் சிக்கி உயிரிழந்த மணிக்குமாரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டாக விழுவது போல் செய்து காட்டிய வாலிபர், நண்பர்கள் கண் முன்னே கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post விளையாட்டு விபரீதமானது நண்பர்கள் கண் முன் கிணற்றில் விழுந்த வாலிபர் பரிதாப சாவு appeared first on Dinakaran.

Tags : Pathapam Rajapalayam ,Rajapalayam ,Virutunagar ,Walliber ,Pity ,
× RELATED ராஜபாளையம் அருகே ஆட்டோ மீது ஆம்னி பஸ் மோதி விபத்து