×

வண்டலூர் தாசில்தார் அலுவலகத்தில் மின் வாரிய அலுவலரின் பைக்கில் இருந்த ரூ. 2.24 லட்சம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை

கூடுவாஞ்சேரி: வண்டலூர் தாசில்தார் அலுவலகத்தில், பட்டப்பகலில் மின் வாரிய அலுவலரின் பைக்கில் இருந்த ரூ.2.24 லட்சம் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கூடுவாஞ்சேரி அடுத்த நந்திவரம், செங்கழனியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராகவன் (46). இவர், வண்டலூர் அடுத்த படப்பையில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் போர்மேனாக வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இல்லை. இவர், தனது அக்கா மகன் பிரேம்குமாருக்கு புதிதாக பைக் வாங்கி கொடுப்பதற்காக நேற்று அவருடன் சென்று கூடுவாஞ்சேரியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் நேற்று பகல் 12 மணியளவில் ரூ.2 லட்சத்து 28 ஆயிரம் பணம் எடுத்துள்ளார்.

தொடர்ந்து தனது தாய் பொன்னம்மாளுக்கு இறப்பு சான்று வாங்குவதற்காக வண்டலூர் தாசில்தார் அலுவலகத்திற்கு இருவரும் சென்றனர். அப்போது, அந்த பணத்திலிருந்து ரூ.4 ஆயிரம் பணத்தை மட்டும் கை செலவிற்கு எடுத்துக்கொண்டு மீதியுள்ள ரூ.2 லட்சத்து 24 ஆயிரம் ரொக்க பணத்தை தனது ஸ்கூட்டியில் வைத்துவிட்டு அலுவலகத்திற்கு உள்ளே சென்றனர். பின்னர், அங்கிருந்து அருகில் உள்ள கடைக்கு சென்று ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு வந்தனர். அப்போது, தாசில்தார் அலுவலக வளாகத்தில் இருந்தவர்கள் ராகவனை அழைத்து உங்களது ஸ்கூட்டியில் இருந்து யாரோ இருவர் மஞ்சப்பையை எடுத்துக்கொண்டு பைக்கில் ஏறி தப்பி ஓடினர் என்று கூறினர்.

இதை கேட்ட ராகவன் உடனே அவரது ஸ்கூட்டியில் சென்று பார்த்தார். அப்போது, அவரது ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 24 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அலறி கூச்சலிட்டார். பின்னர், இதுகுறித்து அவர் ஓட்டேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், ஓட்டேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வண்டலூர் தாசில்தார் அலுவலகம் மற்றும் கூடுவாஞ்சேரியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் முன்பு உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம ஆசாமிகள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், தாசில்தார் அலுவலகத்தில் சிசிடிவி கேமராக்கள் இருந்தும் பட்ட பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வண்டலூர் தாசில்தார் அலுவலகத்தில் மின் வாரிய அலுவலரின் பைக்கில் இருந்த ரூ. 2.24 லட்சம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை appeared first on Dinakaran.

Tags : Vandalur Dasildar ,Kooduvancheri ,Vandalur ,Dasildar ,Gradhal ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும்