×

நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு: மர்ம நபருக்கு வலை

அம்பத்தூர்: கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரால் பரபரப்பு நிலவியது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் வெளி மாவட்டங்கள் மற்றும் மற்ற மாநிலங்களுக்கும் அரசு விரைவு பேருந்துக்கள் இயக்கப்படுகின்றன. தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருவதால் 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், நேற்று மதியம் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட மர்ம நபர், ‘‘கோயம்பேடு பேருந்து நிலைத்தில் உள்ள 1ம் நடைமேடையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது.

அது விரைவில் வெடிக்கும்,’’ என்று கூறி அழைப்பை துண்டித்துள்ளார். இதுகுறித்து உடனடியாக கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அங்கு விரைந்து வந்த கோயம்பேடு துணை ஆணையர் குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் ரமேஷ்கண்ணா பிரிவின் குமார் தலைமையிலான போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் 2 மோப்ப நாயகளுடன் 1ம் நடைமேடை மற்றும் வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை நிறுத்தி சோதனை செய்தனர்.

மேலும், நடைபாதையில் உள்ள பயணிகள், அவர்களது பைகள், பேருந்துகள் மற்றும் அங்குள்ள டீக்கடை மற்றும் ஓட்டல்கள் பெட்டி கடைகள், பேருந்து நிலையத்திற்கு உள்ளே வரக்கூடிய வாகனங்கள் அனைத்தையும் தீவிர சோதனை செய்தனர். இதனை கண்ட பயணிகள் பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக பயந்து பீதியில் அலறி அடித்து ஒட்டம் பிடித்தனர். சுமார் 2 மணி நேரமாக பேருந்து நிலையம் முழுவதும் சோதனை செய்ததில் வெடிகுண்டு இல்லை என்றும், இந்த மிரட்டல் வெறும் புரளி என்பதும் தெரிய வந்தது. இதனால், போலீசார், பயணிகள் நிம்மதியடைந்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுவித்த மர்ம நபர் யார் என்று விசாரணை செய்து வருகிறோம். வெடிகுண்டு எச்சரிக்கை விடுத்த மர்ம நபரின் செல்போனை டவர் மூலமாக கண்காணித்தபோது, அரும்பாக்கத்தில் இருந்து ஆன் செய்யப்பட்டு அதன் பின்னர் பெரும்பாக்கம் வரை சென்ற போது திடீரென சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. எனவே மர்ம நபரின் செல்போன் நம்பர் தொடர்ந்து கண்காணித்து, அவர் கைது செய்யபடுவார்,’’ என்றனர். இந்த சம்பவத்தால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

The post நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு: மர்ம நபருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Ampathur ,Koyambedu bus station ,Koyambedu bus ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து...