×

ஆரணியாற்றின் குறுக்கே பாலத்தில் உடைந்துள்ள தடுப்புச்சுவர்: சீரமைக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை: தொளவேடு – ஏனம்பாக்கம் பகுதியில் ஆரணியாற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் உடைந்துள்ள தடுப்புகளை சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியத்தில் தொளவேடு கிராமத்தை சுற்றி காக்கவாக்கம், தும்பாக்கம், கல்பட்டு, மாளந்தூர், ஆவாஜிபேட்டை, மேல்மாளிகைப்பட்டு, கீழ்மாளிகைப்பட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், மாணவ – மாணவிகள் என சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

இவர்கள் விவசாய பொருட்கள் வாங்குவதற்கும், வேலைகளுக்கும், பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல, இக்கிராமத்தையொட்டி உள்ள தொளவேடு- ஏனம்பாக்கம் இடையே ஆரணியாற்றில் இறங்கி தண்டலம் சென்று அங்கிருந்து பெரியபாளையம், ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு சென்றனர். மழைக்காலத்தில் ஆற்றில் தண்ணீர் வந்தால் இந்த 20 கிராம மக்கள் செங்காத்தாகுளம் மற்றும் வெங்கல், சீத்தஞ்சேரி கிராமங்களின் வழியாகவும் 10 முதல் 20 கி.மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு சென்றனர். இதனால் தொளவேடு-ஏனம்பாக்கம் ஆரணியாற்றின் இடையே கடந்த 2011 – 2012ம் ஆண்டு ரூ.6 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டது. இதனால் 20 கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இந்நிலையில் இந்த மேம்பாலத்தின் தடுப்பு சுவர் திடீரென கடந்த 4 வருடத்திற்கு முன்பு உடைந்துவிட்டது. இதில் இரவு நேரத்தில் கிராமங்களுக்கு செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், நடந்து போவோரும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். பாலத்தின் தடுப்புகள் உடைந்தது குறித்து அப்பகுதி மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் பலனில்லை. எனவே பாலத்தின் தடுப்புகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: தொளவேடு-ஏனம்பாக்கம் ஆரணியாற்றின் குறுக்கே கடந்த 2011 – 2012ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கடந்த 4 வருடத்திற்கு முன்பு சேதமடைந்துள்ளது. நாங்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றால் உடைந்துபோன பாலத்தின் தடுப்பில் இருந்து ஆடு, மாடுகள் கீழே விழுந்து இறந்து விடுகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தின் தடுப்புகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post ஆரணியாற்றின் குறுக்கே பாலத்தில் உடைந்துள்ள தடுப்புச்சுவர்: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Araniyar ,Oothukottai ,Tolavedu - Enambakkam ,Dinakaran ,
× RELATED புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20...