×

மீண்டும் தலைதூக்கிய ‘ரூட் தல’ பிரச்னை அண்ணா சாலையில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவர்களிடையே மோதல்: 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை

சென்னை: ரூட் தல பிரச்னையில் நந்தனம் கல்லூரி மாணவர்கள் மற்றும் புதுக் கல்லூரி மாணவர்கள் நேற்று, அண்ணா சாலையில் ஓடும் பேருந்தில் மோதிக்கொண்டனர். இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். மோதல் தொடர்பாக 3 கல்லூரி மாணவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே அடிக்கடி நடந்து வந்த ‘ரூட் தல’ பிரச்னை மாநகர காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கையால் தற்போது குறைந்துள்ளது. இருந்தாலும், ரயில்களில் செல்லும் மாணவர்களிடையே ரூட் தல பிரச்னை தொடர்ந்து நீடித்து வருகிறது. அவ்வப்போது அவர்கள் மோதிக்கொள்கின்றனர். அதற்கும் ரயில்வே போலீசார் பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

சில மாதங்களாக ரூட் தல பிரச்னை சென்னை மாநகர காவல் எல்லையில் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், மீண்டும் மாணவர்களிடையே ‘ரூட் தல’ பிரச்னை தலைதூக்கியுள்ளது பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், நேற்று காலை 10.15 மணி அளவில் மாநகர பேருந்து ஒன்று அண்ணா சாலை சிம்சன் சிக்னல் அருகே வந்தது. அப்போது, அதில் நந்தனம் கல்லூரி மாணவர்கள் மற்றும் புதுக் கல்லூரி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் படியில் தொங்கியபடி பயணம் செய்தனர்.

பேருந்து நிறுத்தத்திற்கு வந்தவுடன் பயணிகள் இறங்குவதற்கு, 3 கல்லூரி மாணவர்கள் வழிவிடாமல் படியிலேயே நின்று இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பேருந்தில் பயணம் செய்த புதுக் கல்லூரி மாணவர்கள், நந்தனம் கல்லூரி மாணவர்களை திட்டியதாக தெரிகிறது. இதனால் இரண்டு கல்லூரி மாணவர்களக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ‘இந்த ரூட்டில் நாங்கள்தான் தல’ என்று கூறி புதுக் கல்லூரி மாணவர்கள் சத்தம் போட்டுள்ளனர். அதேபோல், நந்தனம் கல்லூரி மாணவர்களும் ‘இந்த ரூட்டில் நாங்கள் மாஸ்’ என்று கூறி எதிர் முழக்கம் எழுப்பி உள்ளனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே வாய்த்தகராறு முற்றி பேருந்து நிறுத்தத்திலேயே ஒருவரை ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிக் கொண்டனர். அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். சாலையில் பாதுகாப்பு பணியில் இருந்த திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் உடனே மோதல் நடந்த இடத்திற்கு வந்தனர்.

போலீசார் வருவதை பார்த்த கல்லூரி மாணவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். இருந்தாலும் போலீசார் துரத்தி சென்று 3 கல்லூரி மாணவர்களை பிடித்தனர். அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து ெசன்று, பேருந்தில் தகராறு செய்த சக மாணவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். ேமாதலில் ஈடுபட்டவர்கள் மாணவர்கள் என்பதால், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று, தப்பி சென்ற கல்லூரி மாணவர்களை தேடி வருகின்றனர்.
மேலும், பிடிபட்ட மாணவர்கள் 3 பேரின் பெற்றோர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு வரவழைத்து அவர்கள் முன்னிலையில் கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அண்ணா சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

The post மீண்டும் தலைதூக்கிய ‘ரூட் தல’ பிரச்னை அண்ணா சாலையில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவர்களிடையே மோதல்: 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Anna Road ,Chennai ,Nandanam College ,Puduch College ,Dinakaran ,
× RELATED அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி...