×

சசிகலா, செம்மலை வழக்கை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சசிகலா, செம்மலை ஆகியோர் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா அக்கட்சியின் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு அப்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் ஒப்புதல் வழங்கியிருந்தனர். இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, அவரை பதவியில் இருந்து நீக்கம் செய்ததோடு, அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கி விட்டு, கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை உருவாக்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனக்கூறி அதனை நிராகரித்தது. இதையடுத்து அந்த உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதையடுத்து மேற்கண்ட விவகாரத்தில் சசிகலாவின் மேல்முறையீட்டு வழக்கை நிராகரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பதிவுத்துறையில் சரி பார்த்த பிறகு தான் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, அவரது வாதங்களை ஏற்பதாகவும் செம்மலை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும் கடந்த பிப்ரவரி 23ம் தேதி உத்தரவிட்டது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராகவும், அதேப்போன்று சசிகலா தொடர்ந்த வழக்குக்கு எதிராகவும் அதிமுகவின் அமைப்பு செயலாளராக செம்மலை தாக்கல் செய்திருத மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது,’ இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

The post சசிகலா, செம்மலை வழக்கை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Sasigala ,Semalai ,Court ,Delhi ,Chennai High Court Division ,Chemalai ,Jayalalitha ,High Court ,Dinakaran ,
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...