×

கூவத்தூர் அருகே ஒடியூர் ஏரி பாதிக்காத வகையில் ஈசிஆர் விரிவாக்க திட்டத்தில் மாற்றம்

சென்னை: கூவத்தூர் அருகே ஒடியூர் ஏரி பாதிக்காத வகையில் ஈசிஆர் சாலை விரிவாக்க திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் கிழக்கு கடற்கரை சாலையில் மெகா விரிவாக்க திட்டம் ஒன்றை தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் முன்னெடுத்துள்ளது. இதில் கூவத்தூர் அருகே ஒடியூர் ஏரி பகுதியில் பல மாதங்களாக சிக்கலை ஏற்படுத்தி வந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த சில வாரங்களில் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க திட்டத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. அதாவது, மாமல்லபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை மொத்தம் 697 கிமீ தூரத்திற்கு 4 வழி சாலை அமைக்கப்படுகிறது.

இதற்காக ரூ.24,435 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு சில பகுதிகளின் விரிவாக்க பணிகள் மாநில நெடுஞ்சாலை துறை அமைச்சக வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மாமல்லபுரம்- புதுச்சேரி இடையில் அமைந்துள்ள ஒடியூர் ஏரி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. ஏனெனில் அங்கு எந்த ஒரு கட்டுமான பணிகளோ அல்லது மேம்பாட்டு திட்டங்களோ மேற்கொள்ள முடியாது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒடியூர் ஏரி, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மிகப்பெரிய ஒன்றாக திகழ்கிறது. 10 கிமீ நீளமும், 5 கிமீ அகலமும் கொண்டது. பாசன டேங்குகள், விவசாய நிலங்கள், நீர்பிடிப்பு பகுதிகள் உள்ளிட்டவற்றில் இருந்து ஒடியூர் ஏரிக்கு நல்ல தண்ணீர் வந்த வண்ணம் இருக்கிறது.

இது ஈரநில சூழலியல் மண்டலத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. மேலும் சதுப்பு நிலம், மணல் மேடு, உப்பு நீர் படிமம் உள்ளிட்டவற்றை கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ஒடியூர் ஏரிக்கு உள்ளே மஞ்சள் நிற மார்க்கர் கற்களை கொண்டு வந்து அடுக்க தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் நடவடிக்கை எடுத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த உள்ளூர் மீனவ சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளித்தனர். விசாரணையில், இந்த பணிக்கு இடைக்கால தடை விதித்து கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது. அதனால் சாலை விரிவாக்க பணிகள் கிடப்பில் போடப்பட்டன. சுமார் 6 மாதங்கள் ஆன நிலையில் தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம், தனது திட்டத்தில் பெரிய மாற்றம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதன்படி, ஒடியூர் ஏரி அருகே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள முயற்சித்தது.

இதுதொடர்பாக கடந்த சில மாதங்களாக தீவிரமாக ஆய்வு செய்ததில் வலதுபுற பகுதியை விட்டு விட்டு, இடதுபுறத்தில் 3 முதல் 4 மீட்டர் அளவிற்கு கூடுதல் நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் நிதி தேவைப்படும் என்பது கவனிக்கத்தக்கது. அதுமட்டுமின்றி ஏரியில் விதிமீறல்கள் ஏதும் நடைபெற கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் தடுப்பு சுவர் ஒன்றை கட்டி எழுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒடியூர் ஏரி அருகே வழித்தடம் மட்டுமே மாறுகிறது. ஏரியில் இருந்து சில 100 மீட்டர்கள் தள்ளி 4 வழிச்சாலை அமைப்பதில் எந்தவித சிக்கலும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த சில வாரங்களில் பணிகள் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் புதிய சீரமைப்பு வரைபடத்தை சமர்பிக்கும்படி மத்திய நிறுனத்திடம் தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியது. அதன்படி கடந்த 14ம் தேதி புதிய சீரமைப்பு குறித்த வரைபடத்தை தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வரைபடத்தை மாற்றி அமைப்பதாக ஏற்கனவே அறிக்கை தாக்கல் செய்துள்ளதால் இந்த திட்டம் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கூவத்தூர் அருகே ஒடியூர் ஏரி பாதிக்காத வகையில் ஈசிஆர் விரிவாக்க திட்டத்தில் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Lake Otur ,Couvathur ,Chennai ,Kouvathur ,East of Tamil Nadu ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...