×

ஆணவப் படுகொலையா?: நெல்லை அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை.. போலீஸ் தீவிர விசாரணை…!!

நெல்லை: நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை சுவாமிதாஸ் நகரை சேர்ந்தவர் 19 வயது முத்தையா. இவர் அங்குள்ள திருமண அழைப்பிதழ் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் வேறு ஒரு சமூகத்தை சேர்ந்த பெண்ணும் பணிபுரிந்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இந்த காதலுக்கு பெண்ணின் குடும்பம் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், பல முறை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று மதியம் முத்தையா வீட்டிற்கு அவருடைய காதலி வந்துள்ளார். இருவரும் சகஜமாக பேசியுள்ளனர். பின்பு நேற்றிரவு காதலியை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு சென்று அவர் வீட்டில் விட்டுள்ளார். பின்னர், முத்தையாவை தொடர்புகொள்ள முடியவில்லை. வெளியே சென்றவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் அச்சம் அடைந்தனர். தொடர்ந்து முத்தையாவின் சகோதரர் அவரை பல இடங்களில் தேடியுள்ளார். அப்போது, வீட்டிற்கு அருகே ஓடை பகுதியில் உடல் முழுவதும் காயங்களுடன் முத்தையாவின் உடல் இருப்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து திசையன்விளை போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முத்தையாவின் சடலத்தை மீட்டு பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 19 வயது இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டாரா? என டிஎஸ்பிகள் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முத்தையா வீட்டிற்கும், அவரது காதலி வீட்டிற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post ஆணவப் படுகொலையா?: நெல்லை அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை.. போலீஸ் தீவிர விசாரணை…!! appeared first on Dinakaran.

Tags : Nellai ,Vektianvilai ,Dinakaran ,
× RELATED நெல்லை காங். தலைவர் மரண வாக்குமூலம்...