
இம்பால்: வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் சுதந்திர போராட்ட வீரரின் மனைவி உயிருடன் எரித்து கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூர் வன்முறை சம்பவத்தில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்று கூட்டுப் பாலியல் பலாத்கார சம்பவத்தை தொடர்ந்து, மேலும் 2 பெண்களை கும்பல் ஒன்று நிர்வாணப்படுத்தி கூட்டு பலாத்காரம் செய்து எரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் காக்சிங் மாவட்டத்தின் செரோவ் கிராமத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரின் மனைவி இபெடோம்பி (80) என்பவர், அவரது சொந்த வீட்டுக்குள்ளேயே உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘ஆயுதமேந்திய கும்பலால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட இபெடோம்பியின் கணவரும் சுதந்திர போராட்ட வீரருமான சுராசாங் சிங், பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களால் கவுரவிக்கப்பட்டவர் ஆவார். சம்பவ நாளன்று, மூதாட்டி இபெடோம்பி அவரது வீட்டிற்குள் இருந்தார்.
அப்போது அங்கு வந்த கும்பல், மூதாட்டி வீட்டிற்குள் இருக்கும் போது, அவரது வீட்டிற்கு தீ வைத்தனர். தீ மளமளவென பிடித்து எரிந்து கொண்டிருக்கையில், அப்பகுதியை சேர்ந்த சிலர் மூதாட்டியை மீட்க முயன்றனர். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மூதாட்டி தீயில் கருகி பலியானார். வீடும் முழுவதுமாக எரிந்துவிட்டது. மேலும் மூதாட்டியுடன் அவரது பேரன் வீட்டில் இருந்துள்ளார். ஆயுதமேந்திய கும்பல் துப்பாக்கியை காட்டி மிரட்டியதால், அந்த சிறுவன் உயிருக்கு பயந்து அங்கிருந்து தப்பித்துவிட்டான்.
The post வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் சுதந்திர போராட்ட வீரரின் மனைவி உயிருடன் எரித்து கொலை: அடுத்தடுத்த கொடூரங்கள் அரங்கேற்றம் appeared first on Dinakaran.