மேலூர், ஜூலை 23: மேலூரை அடுத்த கொட்டாம்பட்டியில் நடந்த வட்டார அளவிலான கல்விக்குழு கூட்டத்தில், அனைத்து கிராமங்களிலும் மாற்றுத்திறன் மாணவர்களை கண்டறிந்து, பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர்.
மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், கொட்டாம்பட்டி வட்டார வளமையத்தில் முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா வழிகாட்டுதலின்படி, மாற்றுத்திறனாளி மாணவர்களை பள்ளியில் சேர்த்தல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் நாகரத்தினா தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் சாந்தி மற்றும் ஆரோக்கியராஜ் முன்னிலையில் கூட்டமி் நடைபெற்றது.
இதில் சிறப்பு பயிற்றுநர் பாண்டி, மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பது, மறுவாழ்வு திட்டங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவி உபகரணங்கள், தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார். மேலும் மாவட்ட திட்ட கூடுதல் ஒருங்கிணைப்பாளர் கார்மேகம், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளி மாணவர்களை அனைத்து கிராமங்களிலும் கண்டறிந்து, ஒருவர் கூட விடுபடாமல் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று கூறினர்.
இதனைத்தொடர்ந்து, இந்த ஆண்டின் தொடர் செயல்பாடுகளாக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய உதவி உபகரணங்கள், மருத்துவ மதிப்பீட்டு முகாமில் அளவீடு செய்து பெற்று வழங்க தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், பிசியோதெரபிஸ்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post வட்டார கல்விக்குழு கூட்டம் மாற்றுத்திறன் மாணவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும்: அதிகாரிகள் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.