கும்பகோணம், ஜூலை 23: ஆடிப்பூரத்தை முன்னிட்டு கும்பகோணம் மகாமக திருக்குளக்கரைக்கு, ஐந்து திருக்கோயில்களில் இருந்து உற்சவர் ஆடிப்பூர அம்மன் எழுந்தருள, அங்குள்ள படித்துறையில் நான்கு அஸ்திரதேவர்களுக்கு ஒரே சமயத்தில் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, ஆடிப்பூர தீர்த்தவாரி நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
பிரசித்தி பெற்ற கும்பகோணம் மகாமக திருக்குளத்தின் கரைக்கு, காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், நாகேஸ்வரர் மற்றும் சாமுண்டீஸ்வரி ஆகிய ஐந்து கோயில்களில் இருந்து, உற்சவர் ஆடிப்பூர அம்மன்கள் நாதஸ்வர மேள தாளம் முழங்க எழுந்தருள, குளத்தின் படித்துறையில், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், வியாழ சோமேஸ்வரர் மற்றும் நாகேஸ்வரர் ஆகிய நான்கு கோயில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட அஸ்திரதேவர்களை எழுந்தருள செய்து, ஒரே சமயத்தில், அவைகளுக்கு திரவியப்பொடி, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் முதலிய பொருட்கள் கொண்டு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்ட பிறகு, நான்கு அஸ்திர தேவர்களையும்,
சிவாச்சாரியார்கள் தோளில் சுமந்தபடி, திருக்குளத்தில் இறங்கி, மும்முறை மூழ்கி எழ, ஆடிப்பூர தீர்த்தவாரி நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் தீவிர கண்காணிப்பிலும், குளத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினரும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர்.
The post ஆடிப்பூரத்தை முன்னிட்டு கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரி appeared first on Dinakaran.