×

முகத்தில் பிளாஸ்டிக் கவரால் சுற்றி மகன் கொலை; மனைவியுடன் இன்ஜினியர் தற்கொலை

தக்கலை: மகன் முகத்தில் பிளாஸ்டிக் கவரால் சுற்றி கொன்று விட்டு, மனைவியுடன் இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்டது தக்கலை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் முகிலன்குடியிருப்பை சேர்ந்தவர் முரளீதரன்(40). சாப்ட்வேர் இன்ஜினியர். இவரது மனைவி சைலஜா. பெங்களூருவில் வேலை பார்த்து வந்த முரளீதரன் கொரோனாவுக்கு பின்னர் வீட்டில் இருந்து வேலை செய்து வந்தார். இவர்கள் கரைக்கண்டர்கோணத்தில் புதிய வீடு கட்டி குடியிருந்து வந்தனர். இவர்களுக்கு 7 வயதில் ஜீவா என்ற மகன் உண்டு. சைலஜாவின் தந்தை கோபாலன் இவர்களுக்கு தினமும் பால் கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். நேற்று காலை பால் கொண்டு வந்த போது கதவு பூட்டப்பட்டு இருந்தது. இதனால் வாசலில் பாலை வைத்து விட்டு சென்றார்.

மாலை வந்து பார்த்த போது பால் அப்படியே இருந்தது. சந்தேகம் அடைந்த அவர் ஆட்டோ டிரைவர் ஒருவரை உதவிக்கு அழைத்து கதவை உடைத்து பார்த்தார். அப்போது வீட்டினுள் 3 பேரும் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து தக்கலை போலீசார் வந்து விசாரணை நடத்தினர். முன்பக்க ஹாலில் முரளீதரனும், படுக்கை அறையில் சைலஜாவும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். படுக்கை அறையில் கட்டிலில் முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடிய நிலையில் சிறுவன் ஜீவா இறந்து கிடந்தான். வீட்டில் இருந்து கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அதில் மகனை கொன்று விட்டு கணவனும் மனைவியும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post முகத்தில் பிளாஸ்டிக் கவரால் சுற்றி மகன் கொலை; மனைவியுடன் இன்ஜினியர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Takkalai ,
× RELATED தக்கலை மணலி ஜங்சனில் தூர் வாரப்படாத கழிவு நீர் ஓடை: பொதுமக்கள் வேதனை