×

இந்த ஆண்டில் மட்டும் 74 தமிழக மீனவர்கள் இலங்கையால் கைது: கனிமொழி எம்பி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்

சென்னை: நாடாளுமன்ற திமுக குழு துணை தலைவர் கனிமொழி மக்களவையில், ”இந்திய மீனவர்கள் ஈரான், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டுக் கடற்படைகளால் சர்வதேச கடல் எல்லையை மீறியதாக கைது செய்யப்பட்டதையும், தாக்கப்பட்டதையும் அரசு அறிந்திருக்கிறதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?. கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்ட, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் எண்ணிக்கை என்ன? நாடு வாரியாக இந்த விவரம் என்ன?. வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகம் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு சட்ட-நீதித்துறை செயல்முறைகளின்படி உதவி செய்கிறதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? வெளிநாட்டுச் சிறைகளில் இருக்கும் நமது மீனவர்களை விடுவிப்பதற்காக அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் என்ன?” என்று கனிமொழி எம்பி கேள்விகளை எழுத்துபூர்வமாக மக்களவையில் எழுப்பினார்.

கனிமொழி எம்.பி.யோடு அடூர் பிரகாஷ், ராஜேஷ்பாய் சௌதசமா ஆகிய எம்.பி.க்களும் இந்த விவகாரம் குறித்து எழுத்துபூர்வமாக கேள்விகள் எழுப்பியிருந்தனர். இந்தக் கேள்விகளுக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், “இந்திய மீனவர்கள் வெளிநாடுகளில் கைது செய்யப்படுவதாகவும், இந்திய மீனவர்களின் மீன் பிடிப் படகுகள் கைப்பற்றப்படுவதாகவும் அரசுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. ஈரானை பொறுத்தவரை, தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் 2023ம் ஆண்டில் இதுவரை 15 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையைப் பொறுத்தமட்டில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 74 இந்திய மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று தகவல்கள் வந்துள்ளன. இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் உள்ள தகவல்களின்படி, 2020-22 ஆகிய மூன்று ஆண்டுகளில் ஈரான் நாட்டில் 27 இந்திய மீனவர்களும், இலங்கையில் 501 இந்திய மீனவர்களும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 5 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பங்களாதேஷில் 309 இந்திய மீனவர்கள், பஹ்ரைன் 12, மியான்மர் 19, பாகிஸ்தான் 1060, கத்தார் 54, சவுதி அரேபியா 564, செஷல்ஸ் 61 என இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆக 2020 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 2612 ஆக இருக்கிறது. அதேநேரம் இந்த அரசு இந்திய மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு அதிக முன்னுரிமை அளிக்கிறது. இந்திய மீனவர்கள் கைது மற்றும் அவர்களின் மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட தகவல்கள் கிடைத்த உடனேயே சம்பந்தப்பட்ட இந்திய தூதரகங்கள் அந்தந்த நாடுகளின் தூதரகங்களை விரைந்து அணுகி, இந்திய மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாக இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 588 இந்திய மீனவர்கள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

The post இந்த ஆண்டில் மட்டும் 74 தமிழக மீனவர்கள் இலங்கையால் கைது: கனிமொழி எம்பி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில் appeared first on Dinakaran.

Tags : Nadu ,Sri Lanka ,Union Minister ,Nilingani ,Chennai ,Deputy Chairman ,Parliamentary Dazhagam Committee ,Iran ,Lingua ,Dinakaran ,
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...