புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனைக்காக 4 சிறுவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சி வேங்கைவயல் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் டிசம்பர் 26ம்தேதி மனிதக்கழிவு கலந்த சம்பவத்தில் இதுவரையில் 158 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த நபர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டனர். இதில் ஏற்கனவே 21 நபர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டுமென கடந்த 10ம்தேதி சிபிசிஐடி போலீசார், புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி 4 சிறுவர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்ய அனுமதி வழங்கியது. இதையடுத்து, நேற்று புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறையூர் கிராமத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் மற்றும் வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுவன் என 4 சிறுவர்களுக்கும் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் மற்றும் வெள்ளனூர் காவல் நிலைய குழந்தைகள் நலக்குழு அலுவலர் ஆகியோரின் மேற்பார்வையில் பெற்றோர்கள் முன்னிலையில் டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. இதில் டிஎன்ஏ பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள், சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.
The post வேங்கைவயல் விவகாரம் 4 சிறுவர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை appeared first on Dinakaran.