சென்னை: லாலாஜி மெமோரியல் பள்ளியின் (ஒமேகா) கிரிக்கெட் மைதானத்தில் ஒளிரும் விளக்கமைப்பை அமைச்சர்கள் அன்பில் மகேஷ், தா.மோ.அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2004ம் ஆண்டு தொடங்கப்பட்ட லாலாஜி மெமோரியல் பள்ளி (ஒமேகா), சிபிஎஸ்சி மற்றும் ஐஜிசிஎஸ்இ கல்வி முறைகளில், 5000க்கும் அதிகமான மாணவர்களுக்கு கல்வி வழங்கி வருகிறது. இங்கு, விளையாட்டு நிகழ்ச்சிகளை திறம்பட நிர்வகிக்க, பிரத்யேக துறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிக்கு சொந்தமான லீக் குழுக்களில் பள்ளியின் தற்போதைய மற்றும் முன்னாள் மாணவர்கள், கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, தடகளம் போன்ற விளையாட்டுகளில் பங்கேற்று வருகின்றனர். இப்பள்ளி மாணவர்களுக்கும், நகர லீக் கிளப்களின் கிரிக்கெட் வீரர்களுக்கும், தரமான பயிற்சி அளிப்பதற்கு ஐசிசி தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள ஒளிரும் விளக்குகளை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்து, முதல் கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தனர். பொருளாளர் சுப்பிரமணியன், மாணவர்கள் வாழ்க்கையில் படிப்பும், விளையாட்டும் ஆற்றிடும் முக்கிய பங்கினை விளக்கினார். பள்ளியின் தலைவர் ராஜேஷ் ராதோட், தாளாளர் பரத் மாதவன், மூத்த பள்ளி முதல்வர் பவானி சங்கர் ஆகியோர் கடந்த 15 வருடங்களில் இப்பள்ளியின் பல்வேறு புதிய முயற்சிகளை எடுத்துரைத்தனர். ஆதித்யா ரவி, 22 யார்ட்ஸ் டைரக்டர் கிரிக்கெட் மூலம் தமிழகத்தில் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துவதைப் பற்றி, அவர்களின் பங்களிப்பை விளக்கினார். முதன்மை இயக்க அலுவலர் கமலக்கண்ணன் நன்றியுரை வழங்கினார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….
The post லாலாஜி மெமோரியல் பள்ளியில் ஒளிரும் விளக்கமைப்பு: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர் appeared first on Dinakaran.