×

கேரளாவில் தாக்குதல் நடத்த சதி பவானியில் பதுங்கியவர் கைது: என்ஐஏ அதிரடி

சத்தியமங்கலம்: கேரளாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியது தொடர்பாக, பவானியில் பதுங்கிய கேரள வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுவதற்காக செயல்படும் அமைப்புகள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களை கண்டறிந்து என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து வருகின்றனர். மேலும், பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தும் திட்டத்தையும் முறியடித்து வருகின்றனர். அந்த வகையில், கேரளாவில் சமுதாய தலைவர்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் மீது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி உள்ளதாகவும், இதற்கு மூளையாக செயல்படும் கும்பல் பவானிசாகர் அருகே பதுங்கி உள்ளதாகவும் என்ஐஏவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி, கேரளாவை சேர்ந்த என்ஐஏ அதிகாரிகள், பவானிசாகர் போலீசார் உதவியுடன் ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அடுத்துள்ள தொட்டம்பாளையம் என்ற கிராமத்தில் விவசாயி மயில்சாமி என்பவரது தோட்டத்து வீட்டில் பதுங்கி இருந்த கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஆசிப் (36) என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் ஐஎஸ்ஐஎஸ்சுக்கு நிதி திரட்டியதும், கேரளாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து, கேரள மாநிலம் கொச்சினுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

அப்போது, விவசாயி மயில்சாமி வீட்டை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 4 நபர்கள் வாடகைக்கு எடுத்து தங்கியதும், ஆசிப் கடந்த ஒரு மாதமாக எந்த வேலைக்கும் செல்லாமல் அந்த வீட்டிலேயே தங்கி இருந்ததும், உடனிருந்த 3 பேர் அப்பகுதியில் செயல்படும் பேக்கரியில் வேலை செய்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து, ஆசிப்புடன் தொடர்பில் இருந்த திருச்சூரை சேர்ந்த செய்யது நபீல் அகமது, ஷியாஸ் டிஎஸ் மற்றும் பாலக்காட்டைச் சேர்ந்த ரயீஸ் ஆகியோர் வீடுகள் மற்றும் ஆசிப் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டியது தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

The post கேரளாவில் தாக்குதல் நடத்த சதி பவானியில் பதுங்கியவர் கைது: என்ஐஏ அதிரடி appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam ,Bhavani ,Kerala ,India ,Sati Bhavani ,NIA ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் பண்ணாரி அருகே கடும்...