திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் நாளை மறுநாள் காலை நடைபெற உள்ளது. இது குறித்து திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி முகேஷ் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவில்லிபுத்தூர் நாச்சியார் (ஆண்டாள்)-ரெங்கமன்னார் திருக்கோவிலில் தேரோட்டம் வரும் 22ம் தேதி நடைபெறும். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவர். இதையொட்டி, சமூக விரோதிகளை கண்காணிக்க தேர் பவனி வரும் பாதையான நான்கு ரதவீதிகள், கோவில் உட்புறம், வெளிபிரகாரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 150 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள், உயர் கட்டிடங்களில் பைனாக்குலர், நவீன கேமராக்கள் பொருத்தியும், உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும் கண்காணிக்கப்படும். காவல்துறையின் ட்ரோன் கேமராக்கள் பறக்கவிடப்பட்டும். அதன் ஒளிப்படம் மூலம் காவல் கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணித்து குற்ற நடவடிக்கைகளை தடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குற்றப்பிரிவு காவலர்கள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குற்றவாளிகளின் செயல்பாட்டினை கண்காணிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேரோட்டத்திற்கு வரும், அனைத்து பக்தர்களும் தங்களது தங்க நகைகளை பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு சேப்டி பின் சுமார் 20,000 பெண்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
The post திருவில்லிபுத்தூரில் நாளை மறுநாள் தேரோட்டம் சமூக விரோதிகளை கண்காணிக்க 150 அதிநவீன சிசிடிவிகள் அமைப்பு: டிஎஸ்பி தகவல் appeared first on Dinakaran.