×

மதி மரண வழக்கில் ஆசிரியர்கள் நீக்கம் ஆட்சேபனை தெரிவிக்க மேலும் அவகாசம் வழங்கியது நீதிமன்றம்

விழுப்புரம், ஜூலை 20: மதி மாணவி மரண வழக்கில் ஆசிரியர்கள் பெயர் நீக்கம் தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்க பெற்றோருக்கு நீதிமன்றம் மேலும் கால அவகாசம் வழங்கியது. கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் மதி. கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தவர் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியைகள் கீர்த்திகா, ஹரிப்பிரியா ஆகியோரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு இருந்தது.

இவ்வழக்கிலிருந்து ஆசிரியைகள் கீர்த்திகா, ஹரிப்பிரியா ஆகிய இருவரையும் விடுவித்ததற்கு ஆட்சேபனை தெரிவிக்க இருப்பதாகவும், அதற்காக குற்றப்பத்திரிகை நகல் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள், சாட்சியங்களின் பதிவு விவரம் ஆகியவற்றை தங்களிடம் ஒப்படைக்குமாறு மதியின் தாய் விழுப்புரம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதன்பேரில் அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் மற்றும் ஆவணங்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் நேற்று நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது மதியின் தாய் செல்வியின் கணவரின் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகினர். அப்போது குற்றப்பத்திரிகை நகல்களை படித்துப் பார்க்க மேலும் அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் வரும் ஆகஸ்ட் 22ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

The post மதி மரண வழக்கில் ஆசிரியர்கள் நீக்கம் ஆட்சேபனை தெரிவிக்க மேலும் அவகாசம் வழங்கியது நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Court ,Mati ,Villupuram ,Mathi ,
× RELATED பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள்...