×

சிறுபுழல்பேட்டை ஊராட்சியில் ஊர்க்காவல் படை வீரரின் வீட்டில் 25 சவரன் கொள்ளை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே சிறுபுழல்பேட்டை ஊராட்சியில் ஊர் காவல் படை காவலர் வீட்டை உடைத்து 25 சவரன் நகை, ரூ.25 ஆயிரம் பணம் மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (34). இவர், பாதிரிவேடு காவல் நிலையத்தில் ஊர்காவல் படை காவலராக சில ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் ஸ்ரீதர் மற்றும் அவருடைய மனைவி பிரியதர்ஷினி, குழந்தையுடன் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்றனர்.

பின்னர், 2 மணி அளவில் குடும்பத்துடன் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதன் பின்னர், ஊர்க்காவல் படை காவலர் ஸ்ரீதர் சிப்காட் காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தார். விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன், சப் – இன்ஸ்பெக்டர் குமணன் மற்றும் போலீசார் வீட்டில் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 25 சவரன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம், உண்டியல் பணம் ரூ.3000 பணம், வெள்ளி 200 கிராம் பொருட்கள் போனது தெரியவந்தது.

இது குறித்து ஸ்ரீதர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதன் பேரில், இன்ஸ்பெக்டர் குமணன் சிப்காட் செல்லும் சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர் திருவள்ளூர் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் சோதனை மேற்கொண்டனர். மேலும், வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

The post சிறுபுழல்பேட்டை ஊராட்சியில் ஊர்க்காவல் படை வீரரின் வீட்டில் 25 சவரன் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Sirupuzhalpet Panchayat ,Kummidipoondi ,
× RELATED கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியத்தில்...