×

ரூ.43.19 கோடி மதிப்பில் ரெட்டேரி ஏரியின் கொள்ளளவு அதிகரிப்பு: ஆகஸ்ட் முதல் பணி தொடங்குகிறது

சென்னை: ரெட்டேரி ஏரியின் கொள்ளளவை அதிகரிக்கும் பணிகள் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை மக்களின் குடிநீர் தேவை பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் மற்றும் போரூர் ஏரிகள் மற்றும் தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் போன்றவை பூர்த்தி செய்து வருகின்றன. இதன் காரணமாக, கோடை வெயில் சுட்டெரித்தாலும் கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் சென்னைவாசிகள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில், சென்னையின் வளர்ந்து வரும் தேவைகளை சமாளிக்கும் வகையில், குடிநீர் விநியோகத்தை அதிகரிக்க தமிழ்நாடு நீர்வளத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னை ரெட்டேரி ஏரியின் கொள்ளளவை அதிகரிக்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது.
சென்னையில் நீர்நிலைகளை தூர்வாரி சீரமைக்கும் நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை தீவிரமாக மேற்கொண்டு உள்ளது. இதையொட்டி, சென்னை மற்றும் புறநகரில் உள்ள 10 ஏரிகளை சீரமைக்கவும் சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழுமம் முடிவு செய்துள்ளது. இதற்காக ஏரிக்கரைகள் மேம்பாடு என்ற புதிய திட்டத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் ஏரிகளை மேம்படுத்த முடிவு செய்துள்ளது. அந்த வகையில், பெரும்பாக்கம், ரெட்டேரி, முடிச்சூர், செம்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம், அயனம்பாக்கம், கொளத்தூர், புழல் ஆகிய 10 ஏரிகள் சீரமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்தின்படி முதல்கட்டமாக, ரெட்டேரி ஏரியில் கொள்ளளவை அதிகரிக்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இந்த பணிகளை தொடங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 400 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியில், 2019ம் ஆண்டு வறட்சியின் போது தண்ணீர் எடுக்கப்பட்டது.

அதற்கு பிறகு நீர்வளத்துறை ஏரியை ஆழப்படுத்தவும், தூர்வாரவும், குடிநீர் ஆதாரமாக மாற்றவும் சுமார் 43.19 கோடி ரூபாய் ஒதுக்கியது. ஏரியின் ஒரு புறம் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் உள்ளன. அவற்றையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த மாதத்திற்குள் டெண்டர் இறுதி செய்யப்பட்டு அடுத்த மாதம் (ஆகஸ்ட் மாதம்) முதல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் ஏரியின் ஓரத்தில் நடைபாதை கட்டுவது உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு ஏற்றவகையில் ஏரி மறுசீரமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக நீர்வளத்துறை அதிகாரி கூறியதாவது: ரெட்டேரி ஏரியில் இருந்து சுமார் 7 லட்சம் கன மீட்டர் வண்டல் மண் அகற்றப்பட உள்ளது. மேலும் ஏரியின் கொள்ளளவு 32 மில்லியன் கன அடியில் இருந்து குறைந்தபட்சம் 45.13 மில்லியன் கன அடியாக உயர்த்தப்படும். ரெட்டேரி சந்திப்பில் இருந்து விநாயகபுரம், அறிஞர் அண்ணா நகர், மாதவரம் போன்ற பகுதிகளை உள்ளடக்கி 3 கி.மீ., தூரத்திற்கு குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில் தடுப்பு சுவர் கட்ட திட்டமிட்டுள்ளோம். ஏரிக்கரையில் உள்ள வண்டல் மண்ணை அகற்றிய பிறகு பறவைகள் வந்து செல்வதற்காக 3 தீவுகள் உருவாக்கப்படுகிறது. வெள்ளத்தின் போது உபரிநீரை சிறப்பாக கையாள கூடுதல் ரெகுலேட்டரை அமைக்க திட்டமிட்டுள்ளோம். டெண்டர் இறுதி செய்யப்பட்ட பிறகு 18 மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

The post ரூ.43.19 கோடி மதிப்பில் ரெட்டேரி ஏரியின் கொள்ளளவு அதிகரிப்பு: ஆகஸ்ட் முதல் பணி தொடங்குகிறது appeared first on Dinakaran.

Tags : Retteri Lake ,CHENNAI ,Redderi Lake ,Dinakaran ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!