×

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மோதல்: வீடியோ வைரலால் பரபரப்பு

தண்டையார்பேட்டை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில், இரு தரப்பு கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்டனர். இந்த சம்பவம் சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணம், ஆவடி, திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு மின்சார ரயில் இயக்கப்படுகிறது. எப்போதும் கடற்கரை ரயில் நிலையம் மக்கள் கூட்டம் நிரம்பி பரபரப்பாக காணப்படும்.

இந்நிலையில் நேற்று மதியம் வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த மின்சார ரயிலில் மாநில கல்லூரி மாணவர்கள் சிலர் இருந்தனர். ரயில், கடற்கரை ரயில் நிலையம் வந்தபோதும் இரு தரப்பு கல்லூரி மாணவர்கள் பயங்கரமாக மோதிக்கொண்டனர். கல்வீசி தாக்குதல் நடத்தியதால் ரயில் நிறுத்தப்பட்டது. கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தால் ரயில் பயணிகள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். சிறிது நேரம் ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகினர். இதுகுறித்து தகவலறிந்தும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

போலீசாரை பார்த்தும் கல்லூரி மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதலில் ஈடுபட்ட மாணவர்களை தேடி வருகிறார்கள். மேலும் மாணவர்கள் மோதல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தால் கடற்கரை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

கல்லூரி மாணவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கத்தியுடன் மோதிக்கொண்டனர். அப்போது அவர்கள் மீது ரயில்வே போலீசார் கடும் நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் சில மாதங்களாக மாணவர்களின் மோதல் இல்லாமல் இருந்து வந்தது. மீண்டும் கல்லூரி மாணவர்கள் மோதல் ஆரம்பித்துள்ளது. மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால், இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடக்காது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

The post சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மோதல்: வீடியோ வைரலால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Beach Railway Station ,Thandaiyarpet ,
× RELATED மாநகர பேருந்து படியில் பயணம்; ‘உள்ளே...