×

`டிசி கொடுத்து விடுவேன்’ என ஆசிரியை திட்டியதால் பள்ளி மாணவி தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது: தென்காசி அருகே சோகம்

புளியங்குடி: ‘டிசி கொடுத்து விடுவேன்’ என ஆசிரியை கண்டித்ததால் புளியங்குடியில் அரசு பள்ளி பிளஸ் 1 மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி எழுதி வைத்திருந்த கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் புளியங்குடி டிஎன்.புதுக்குடி பிச்சாண்டி கீழத்தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி மாரியம்மாள் (42). இவர்களது மகள் முனீஸ்வரி என்ற முகிலா (16), புளியங்குடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கருப்பசாமி, கடந்த 10 ஆண்டுக்கு முன் இறந்து விட்டதால் மாரியம்மாள், சென்ட்ரிங் வேலை செய்து மகளை படிக்க வைத்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் முனீஸ்வரி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். இடைவெளி நேரத்தில் ஸ்காலர்ஷிப் தொடர்பாக பள்ளியில் இருந்து சான்றிதழ் பெறுவதற்காக அலுவலக அறைக்கு சென்றார். அதற்கு தாமதமானதால் விலங்கியல் வகுப்பில் பங்கேற்க உதவி தலைமை ஆசிரியர் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் வெளியே நிற்குமாறும் கூறியுள்ளார். இதனால் மாணவி மனமுடைந்தார். நேற்று வழக்கம்போல் முனீஸ்வரி பள்ளிக்கு சென்றார். அப்போதும், விலங்கியல் வகுப்புக்கு தாமதமாக சென்றதை தலைமை ஆசிரியை கண்டித்ததுடன் பள்ளி இடமாறுதல் சான்றிதழ் (டிசி) வழங்கி விடுவதாக மிரட்டினாராம். இதனால் தாய்க்கு அவமானமாகி விடும் என்று கருதிய முனீஸ்வரி, நேற்று மாலை பள்ளி முடிந்த பின்னர் வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து புளியங்குடி போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வீட்டில் மாணவி கைப்பட எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். அதில், பள்ளியில் ஏற்பட்ட தாமதம் குறித்து சக மாணவிகள் முன்னிலையில் உதவி தலைமை ஆசிரியை என்னை திட்டினார். மேலும் தலைமை ஆசிரியை வந்தும் டி.சி (பள்ளி மாற்றுசான்றிதழ்) வழங்கிடுவேன்’ என்றார். எனக்கு டி.சி கொடுத்தால் என் தாய்க்குதான் மிகவும் அவமானமாகி விடும். நான் டாக்டருக்கு படிக்க விரும்பினேன். முடியலை. உங்களை விட்டு பிரிகிறேன்’ என்று உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார். மாணவி தற்கொலையை தொடர்ந்து பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளதால் பள்ளி, மாணவியின் வீடு அமைந்துள்ள பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post `டிசி கொடுத்து விடுவேன்’ என ஆசிரியை திட்டியதால் பள்ளி மாணவி தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது: தென்காசி அருகே சோகம் appeared first on Dinakaran.

Tags : DC'' ,Tenkasi ,Puliangudi ,Government School Plus 1 ,DC ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...