பாப்பாக்குடி, ஜூலை 20: முக்கூடலில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் உள்பட 2பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 3பேரை போலீசார் கைது செய்தனர். முக்கூடலில் இருந்து ஆலங்குளம் செல்லும் சாலையில் சந்தனம் மகன் ராஜன் (41) என்பவர் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இந்த பங்கில் நேற்று முன்தினம் இரவு சீதபற்பநல்லூரை சேர்ந்த விஜய் என்ற இசக்கிபாண்டி, கருத்தபாண்டி உள்பட 3 பேர் மதுபோதையில் வந்து வாகனத்துக்கு பெட்ரோல் போட்டுவிட்டு பணம் கொடுக்காமல் ராஜனை மிரட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்து பாப்பாக்குடி போலீசில் ராஜன் புகார் அளித்தார். இந்நிலையில் நேற்று ராஜன், பெட்ரோல் பங்கில் இருப்பதை நோட்டமிட்ட 7பேர் கொண்ட கும்பல் திடீரென பங்கில் அரிவாளுடன் சென்று அவரை வெட்ட முயன்றனர்.
இதனை அங்கு பணியில் இருந்த முக்கூடலை சேர்ந்த பாக்கியதாஸ் மகன் சுபாஷ் (35) என்பவர் தடுத்துள்ளார். அப்போது அந்த கும்பல், சுபாஷை சரமாரியாக வெட்டியது. மேலும் ராஜனையும் அந்த கும்பல் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது. அப்போது அங்கு வந்த போலீசார், கும்பலில் ஒருவரை கையும் களவுமாக பிடித்த நிலையில் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் பணம் கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டவர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சீதபற்பநல்லூரை சேர்ந்த விஜய் (23), கருத்தபாண்டி(30), ரங்கசாமி (40) ஆகிய 3பேரை கைது செய்தனர். பெட்ரோல் பங்க் உரிமையாளர் ராஜன் ஏற்கனவே புகார் கொடுத்திருந்த நிலையில் உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சம்பவம் நடந்து இருக்காது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
மேலும் அரிவாள் வெட்டு சம்பவம் நடந்த பெட்ரோல் பங்கில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் 7 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் பங்கை நோட்டமிட்டு ராஜன் உள்ளிட்ட இருவரை அரிவாளால் வெட்டியதாக உரிமையாளர் கூறும் நிலையில் போலீசார், தரப்பில் 3 பேர் மட்டுமே ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அந்த சிசிடிவி காட்சிகளை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் பார்க்க முடியாத வண்ணம் போலீசாரே தடுத்து நிறுத்தியது சமூக ஆர்வலர்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post முக்கூடலில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் உள்பட 2பேருக்கு வெட்டு appeared first on Dinakaran.