×

போலி வீட்டுமனை பட்டாவை காட்டி பால் வியாபாரியிடம் ரூ.71 லட்சம் மோசடி: தம்பதி கைது

சென்னை: வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பால் வியாபாரி லட்சுமணன், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், நான் வேளச்சேரி ராமகிரி நகர் 2வது தெருவில் 2500 சதுரடியில் 5 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குயிடிப்பை, புரோக்கர் ராஜா என்பவர் மூலம் வாங்க முயற்சி செய்தேன். சம்மந்தப்பட்ட வீட்டிற்கு சென்று குடியிருப்பின் உரிமையாளர்களான பிரியா விஷா (38), அவரது கணவர் சாகுல் ஹமீது (58) மற்றும் காஜா மொய்தீன், மொய்தீன் அப்துல் காதர் ஆகியோரை சந்தித்து, குடியிருப்புடன் ரூ.2.10 கோடிக்கு விலை பேசி முடிக்கப்பட்டது. முன் பணமாக ரூ.71 லட்சம் பிரியா விஷா மற்றும் அவரது கணவர் சாகுல் ஹமீதிடம் கொடுத்தேன்.

மீதமுள்ள பணம் பத்திரப்பதிவின் போது தருவதாக கூறியிருந்தேன். பிறகு இடத்திற்கு விற்பனை பத்திரம் செய்து கொண்டேன். அதன் பிறகு இடத்தின் பட்டா, பத்திரத்தை வாங்கி சார் பதிவாளர் அலுவலகத்தில் சரிபார்த்த போது, குடியிருப்பு உள்ள வீடு 2400 சதுரடியில் பட்டா இல்லை. அதற்கு பதில் 1506 சதுரடி மட்டும் அரசு நில அளவு பட்டாவில் உள்ளது என தெரியவந்தது. இதுகுறித்து நான் கேட்ட போது, உரிய பதில் அளிக்கவில்ைல. நான் கொடுத்த ரூ.71 லட்சத்தை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

புகாரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையிலான போலீசாருக்கு உத்தரவிட்டார். விசாரணையில், பிரியா விஷா, அவரது கணவர் சாகுல் ஹமீது, புரோக்கர் ராஜா மற்றும் காதர் மொய்தீன், மொய்தீன் அப்துல் காதர் ஆகியோர் மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் போலி பட்டாவை தயார் ெசய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அதைதொடர்ந்து பிரியா விஷா, அவரது கணவர் சாகுல் ஹமீதை நேற்று முன்தினம் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள புரோக்கர் ராஜா உள்பட 3 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

The post போலி வீட்டுமனை பட்டாவை காட்டி பால் வியாபாரியிடம் ரூ.71 லட்சம் மோசடி: தம்பதி கைது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Lakshmanan ,Vannarappat ,Velachery ,Dinakaran ,
× RELATED ஊழியரை கொடுமை செய்த கடை உரிமையாளர் கைது..!!