×

பெங்களூருவில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானார்: கோட்டயத்தில் நாளை அரசு மரியாதையுடன் அடக்கம்

திருவனந்தபுரம்: பெங்களூருவில் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி (79). நேற்று அதிகாலை காலமானார். அவரது உடல் சொந்த ஊரான கோட்டயம் அருகே உள்ள புதுப்பள்ளியில் நாளை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி. கடந்த சில வருடங்களாக உம்மன்சாண்டி தொண்டை புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். ஜெர்மனியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் தொடர் சிகிச்சைக்காக பெங்களூருவில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4.25 மணியளவில் உம்மன்சாண்டி காலமானார். அவரது மகன் சாண்டி உம்மன் சமூக வலைதளம் மூலம் இந்த தகவலை அறிவித்தார். பின்னர் அவரது உடல் பெங்களூரு இந்திரா நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜான் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சோனியா காந்தி, ராகுல்காந்தி, தமிழ்நாடு முதல்வர் முக,ஸ்டாலின், சித்தராமையா உட்பட பலர் அஞ்சலி செலுத்தனர். பின்னர் உடல் விமானம் மூலம் பிற்பகல் 2.30 மணியளவில் திருவனந்தபுரத்தில் உள்ள உம்மன்சாண்டியின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

வழி நெடுகிலும் ஏராளமாேனார் திரண்டு அஞ்சலி செலுத்தனர். பின்னர் தலைமை செயலக தர்பார் அரங்கிலும் பாளையத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆலயத்திலும் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்திலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்வர் பினராய் விஜயன், காங்கிரஸ் மூத்த தலைவர் அந்தோணி, ரமேஷ் சென்னித்தலா உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர் இன்று காலை உடல் கோட்டயம் கொண்டு செல்லப்படுகிறது. திருநக்கரை மைதானத்தில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும். இரவு புதுப்பள்ளியில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்படும். நாளை (20ம் தேதி) பிற்பகல் 2.30 மணிக்கு புதுப்பள்ளியில் உள்ள ஆலயத்தில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும். உம்மன் சாண்டியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான், உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உம்மன்சாண்டியின் மறைவைத் தொடர்ந்து கேரளாவில் நேற்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. நேற்று, இன்று, நாளை என 3 நாள்கள் கேரளாவில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

The post பெங்களூருவில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானார்: கோட்டயத்தில் நாளை அரசு மரியாதையுடன் அடக்கம் appeared first on Dinakaran.

Tags : Former ,Kerala ,Chief Minister ,Umman Sandy ,Bangalore ,Kottayam ,Thiruvananthapuram ,Chief of ,Ummansandi ,Bengaluru ,Dinakaran ,
× RELATED இவிஎம்மில் என் போட்டோ சிறிதாக உள்ளது:...