×

கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைக்கு பதிவு செய்யலாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைக்கு பதிவு செய்யலாம் என திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருத்தணி வட்டம், திருவாலங்காடு திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நடப்பாண்டு அரவைப் பருவத்திற்கு 2.50 லட்சம் டன்கள் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஆலையின் அரவை எதிர்வரும் நவம்பர் மாதம் 4வது வாரத்தில் துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்பருவத்திற்கு இதுவரை 7,800 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் விவகார எல்லைக்குட்பட்ட திருவள்ளுர், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி வட்டங்களில் கரும்பு பயிரிட்டு, இதுநாள் வரை ஆலையின் அரவைக்கு பதிவு செய்யாத விவசாயிகள் அந்தந்த பகுதி கரும்பு அலுவலர்களை உடனடியாக தொடர்பு கொண்டு வருகின்ற 31ம் தேதிக்குள் விடுபடாது பதிவு செய்யலாம். திருவள்ளுர் மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் மானியத்தில் இடுபொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் நடப்பாண்டில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு 300 ஹெக்டர் பரப்பளவில் சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சொட்டு நீர் பாசனம் மூலம் கரும்பு நடவு செய்யும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீதத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதத்திலும் அரசு மானியம் வழங்கப்படுகிறது. எனவே அனைத்து கரும்பு சாகுபடி செய்யும் விவசாயப்பெருமக்களும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி நடவு பருவத்தில் அதிக அளவில் கரும்பு நடவு செய்து சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்கு முன்பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் தமிழ்நாடு அரசால் நடப்பாண்டு கரும்பு அரவைப் பருவத்திற்கு பதிவு செய்யும் விவசாயிகளுக்கு காட்டுப்பன்றி விரட்டி மருந்து 1 ஹெக்டேருக்கு 5 லிட்டர் வீதம் 50 சதவீதம் மானிய விலையில் ரூ.2250 க்கு வழங்கப்படவுள்ளது. எனவே விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற உடனடியாக கரும்பு பதிவு செய்யுமாறு மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதவிர, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 4 முதல் 5 அடி பாரில் 1 ஹெக்டேரில் நடவு செய்ய தேவைப்படும் 12500 பருசீவல் நாற்றுகள் 50 சதவீதம் மானியத்தில் ரூ.12,500 க்கும், கரும்பு சாகுபடியில் உற்பத்தி செலவினை குறைக்கும் வகையில் 1 ஹெக்டேருக்கு 2.5 டன்கள் விதை கரும்பு மட்டுமே பயன்படுத்தி ஒரு பரு விதை கரணை மூலம் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.3750 மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே கரும்பு விவசாயிகள் மேற்குறிப்பிட்ட அனைத்து அரசு திட்டங்களிலும் பயன்பெற உரிய ஆவணங்களுடன் முன்பதிவு செய்யுமாறும்;, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அரவைக்கு முழுவதுமாக கரும்பு சப்ளை செய்தும் பயன்பெறுமாறும், மேலும் கூடுதல் விவரங்கள் பெறுவதற்கு திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கரும்பு பெருக்கு அலுவலரை 9943966322 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

The post கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைக்கு பதிவு செய்யலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Collector ,Alby John Varghese ,Dinakaran ,
× RELATED அரசு தொழிற்பயிற்சி மையங்களில் 100% மாணவர் சேர்க்கை : கலெக்டர் அறிவுறுத்தல்