×

தாம்பரம் அருகே போதையில் மாடியில் இருந்து குதித்தபோது உயரழுத்த மின் கம்பியில் விழுந்த கார்பென்டர் பலி

தாம்பரம்: தாம்பரம் அருகே குடும்ப பிரச்னையில் மதுபோதையில் வீட்டு மாடியில் இருந்து குதித்தபோது, உயரழுத்த மின்கம்பியில் விழுந்த கார்பென்டர் பலியானார். மேற்கு தாம்பரம், மாந்தோப்பு சிவராஜ் தெருவை சேர்ந்தவர் எட்வின் பாபு. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு டேவிட், டேனியல் என 2 மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகன் டேனியல் (23) கார்பென்டர் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தனது தாயுடன் டேவிட் சண்டை போட்டுள்ளார்.

அப்போது அங்கு வந்த டேனியல், எதற்காக அம்மாவிடம் சண்டை போடுகிறாய், அடிக்கடி சண்டை போடுவதால் வீட்டுக்கு வரவே பிடிக்க வில்லை என கூறி கோபித்து கொண்டு பழையபெருங்களத்தூர் காமராஜர் சாலையில் உள்ள தனது நண்பர் மணிகண்டன் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு மது அருந்தியுள்ளார். பின்னர், நண்பன் வீட்டின் முதல் மாடியில் இருந்து குதித்துள்ளார்.

அப்போது வீட்டை ஒட்டியபடி சென்ற உயரழுத்த மின் கம்பியில் விழுந்துள்ளார். இதனால் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக தாம்பரம் தீயணைப்புத்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மின்சாரம் துண்டித்தனர். பின்னர் அவரை மீட்டு தீயணைப்பு வாகனத்தில் வைத்து சிபிஆர் சிகிச்சை கொடுத்து உயிர்காக்க முயற்சி செய்தனர்.

ஆனால் எந்த பலனுமின்றி டேனியல் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்ததும் பீர்க்கன் காரணை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, டேனியல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

The post தாம்பரம் அருகே போதையில் மாடியில் இருந்து குதித்தபோது உயரழுத்த மின் கம்பியில் விழுந்த கார்பென்டர் பலி appeared first on Dinakaran.

Tags : Carpenter ,Tambaram ,Dinakaran ,
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!