சென்னை: எதிர்க்கட்சிகள் எல்லாம் நாட்டு நலனுக்காக ஓரணியில் திரண்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று 2வது நாளாக நடைபெற்று வருகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தும் வகையில் 26 எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,
எதிர்க்கட்சிகள் எல்லாம் நாட்டு நலனுக்காக ஓரணியில் திரண்டுள்ளனர்:
எதிர்க்கட்சிகள் எல்லாம் நாட்டு நலனுக்காக ஓரணியில் திரண்டுள்ளனர். வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் ஒரே இலக்கு. பல ஆண்டுகளாகவே, நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஓரணியில் சேர்க்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாடுபட்டு வருகிறார். எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு சனாதன சக்திகளை தோற்கடிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக முதல்வர் உழைத்து வருகிறார். எதிர்க்கட்சிகள் கூட்டணியில் திமுகவுக்கு முக்கிய இடம் உண்டு என்று தெரிவித்தார்.
அனைத்துக் கட்சிகளின் மூத்த தலைவர்களும் கூட்டாக விவாதித்து இன்றைய கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரலை இறுதி செய்துள்ளனர். மணிப்பூர் பிரச்சனை, பொது சிவில் சட்டம், எதிர்க்கட்சிகள் ஆகும் மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடு பற்றி விவாதிக்கப்படும். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எல்லா கட்சிகளும் ஓரணியில் திரண்டுள்ளோம். நிச்சயமாக எதிர்க்கட்சிகளுக்குள் ஒருமித்த கருத்து உருவாகும் என்று தொல். திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்தார். ஒருமித்த கருத்துகள் அடிப்படையில் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை எதிர்க்கட்சிக் கூட்டணி வகுக்கும் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பதே இல்லை:
தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பதே இல்லை; பாஜக கூட்டணிக்கட்சிகள் எல்லாம் சிதறிவிட்டன என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். விலகிச் சென்றுவிட்ட கட்சிகளையெல்லாம் மீண்டும் சேர்த்து ஒட்டுவேலை செய்ய பாஜக முயன்று வருகிறது. பாஜக தற்போது அவர்களது கருத்துடன் ஒன்றுபடும் கட்சிகளை சேர்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. பாஜகவுக்கு மாற்றாக, எங்களின் எதிர்க்கட்சிக் கூட்டணி வலுவான கொள்கையுடன் அமைக்கப்பட்டுள்ளது என்று திருமாவளவன் குறிப்பிட்டார்.
The post எதிர்க்கட்சிகள் எல்லாம் நாட்டு நலனுக்காக ஓரணியில் திரண்டுள்ளனர்: வி.சி.க. தலைவர் திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.