×

வாணாபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டத்தை உருவாக்கி அரசாணை வெளியீடு!

கள்ளக்குறிச்சி: வாணாபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டத்தை உருவாக்கி அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வருவாய் வட்டத்தினை சீரமைத்து புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. வாணாபுரம் வருவாய் வட்டம் ரூ.7.56 கோடி செலவில் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுற்குறித்து வெளியான அறிக்கையில்; வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரின் அறிவிப்பின் அடிப்படையில், கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையரின் கடிதங்களில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம், திருக்கோவிலூர் வருவாய் வட்டங்களைச் சீரமைத்து வாணாபுரம் புதிய வருவாய் வட்டம் உருவாக்குவது குறித்து மாவட்ட ஆட்சியரிடமிருந்து அறிக்கை பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் ஆகிய இரண்டு கோட்டங்களும், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் மற்றும் கல்வராயன்மலை ஆகிய ஆறு வருவாய் வட்டங்களும் அடங்கியுள்ளன.

இவற்றில் தற்போதுள்ள சங்கராபுரம் வட்டத்திலுள்ள சிறுபனையூர், கள்ளிப்பாடி, லா.கூடலூர், அலியாபாத், பிரிவிடையாம்பட்டு, மண்டகப்பாடி மற்றும் பல கிராம மக்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய சேவைகளான வாரிசு சான்று, பட்டா மாற்றம், சாதிச்சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றுகளை பெறுவதற்கு, தற்போதைய சங்கராபுரம் வட்டத்தின் தலைமையிடம் சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளதால் வந்துசெல்ல சிரமப்பட வேண்டியுள்ளதாலும், இதனால் வருவாய்த்துறை சார்ந்த சேவைகளை பெறுவதற்கு அக்கிராம மக்கள் ஒருநாள் முழுவதையும் முழுமையாக செலவழிக்கப்பட வேண்டியுள்ளது எனவும், அதோடு மட்டுமல்லாமல் போக்குவரத்து கட்டணமும், இரண்டு மூன்று பேருந்துகள் மாறி மாறி பயணம் செய்தும் வட்ட தலைமை அலுவலகமான சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரவேண்டியுள்ளது மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் வட்டத்தில் ஒரு பகுதியாக உள்ள அதாவது புதிய வட்டமாக உத்தேசிக்கப்பட்டுள்ள வாணாபுரம் கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்கள் பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்பிலும், கல்வி அறிவிலும், இயற்கை வளத்திலும் போக்குவரத்து வசதியிலும் மிகவும் பின்தங்கி உள்ளன எனவும், எனவே வெகுதொலைவில் உள்ள கிராமங்களைப் பிரிப்பதன் மூலம் அம்மக்களுக்கு கால விரையம் மற்றும் பண விரையத்தை குறைக்கவும், உடனடியாக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் விரைந்து பெற்றிட வசதியாக வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை ஒருங்கிணைத்து வாணாபுரம் வட்டமாக உருவாக்கிட, தற்போது கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட சங்கராபுரம் வட்டத்திலிருந்து ரிஷிவந்தியம், அரியலூர், வடபொன்பரப்பி ஆகிய குறுவட்டங்கள் மற்றும் திருக்கோவிலூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட திருக்கோவிலூர் வட்டத்தில் தற்போதுள்ள மணலூர்பேட்டை குறுவட்டத்தில் 11 வருவாய் கிராமங்களை மட்டும் சேர்த்து வடபொன்பரப்பி, அரியலூர், ரிஷிவந்தியம் மற்றும் மணலூர்பேட்டை
(11) குறுவட்டங்களாக மறுசீரமைத்து வாணாபுரம் கிராமத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டத்தினை உருவாக்கலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் மற்றும் திருக்கோவிலூர் வருவாய் வட்டங்களைச் சீரமைத்து வடப்பொன்பரப்பி, ரிஷிவந்தியம், அரியலூர் மற்றும் மணலூர்பேட்டை ஆகிய 4 குறுவட்டங்களுடன் 85 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி வாணாபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வாணாபுரம் வருவாய் வட்டம் உருவாக்கலாம் என்றும், புதிதாக உருவாக்கப்படவுள்ள வாணபுரம் வருவாய் வட்டத்திற்கு மொத்தமுள்ள 48 பணியிடங்களில் மறுப்பரவலமர்த்தல் அடிப்படையில் 10 பணியிடங்களும், புதிதாக தோற்றுவிப்பதன் அடிப்படையில் 38 பணியிடங்களை உருவாக்கலாம் என்றும், புதியதாக உருவாக்கப்படவுள்ள வாணாபுரம் வருவாய் வட்டத்திற்கு ஒரு வருடத்திற்கு தோராயமாக ஏற்படும் தொடரும் செலவினம் ரூ.1,43,01,860 மற்றும் தொடரா செலவினம் ரூ.46,52,709 நிதி ஒப்பளிப்பு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் மற்றும் வருவாய் வட்டங்களைச் சீரமைத்து வடப்பொன்பரப்பி, ரிஷிவந்தியம், அரியலூர் மணலூர்பேட்டை ஆகிய 4 குறுவட்டங்களுடன் 85 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி வாணாபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வாணாபுரம் வருவாய் வட்டமாக உருவாக்கப்படுகிறது.

புதிதாக உருவாக்கப்படவுள்ள வாணாபுரம் வருவாய் வட்டத்திற்கு அனுமதிக்கப்பட வேண்டிய 44 பணியிடங்களில் (சங்கராபுரம் வருவாய் வட்டத்திற்கு ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்களிலிருந்து மிகைப்பணியிடங்கள் மற்றும் திருக்கோவிலூர் வருவாய் வட்டத்திற்கு ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்களிலிருந்து 2 மிகை பணியிடத்தையும் சேர்த்து) 11 பணியிடங்கள் மறுபரவலமர்த்தல் அடிப்படையில் 9 பணியிடங்கள் புதியதாக தோற்றுவிக்கப்படுகிறது.

புதிதாக உருவாக்கப்படவுள்ள வாணாபுரம் வருவாய் வட்டத்திற்கு ஒரு வருடத்திற்கு, தோராயமாக ஏற்படும் தொடரும் செலவினம் ரூ.1,38,58,500 மற்றும் தோராயமாக ஏற்படும் தொடரா செலவினம் ரூ.40,90,200 நிதி ஒப்பளிப்பு செய்யப்படுகிறது. தொகுப்பு கிராமங்களை பிரித்து புதிதாக தொகுப்பு கிராமங்களை உருவாக்குதல் தொடர்பாக நடைமுறையில் உள்ள விதிமுறைகள், சட்டம் மற்றும் அரசாணைகள் பின்பற்றப்பட வேண்டும். இரவுக் காவலர், மசால்சி, புல உதவியாளர் போன்ற பணியிடங்கள் அரசு ஆணை (நிலை) எண்.49, பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறை, நாள் 14.5.2002-இன்படி வெளிமுகமை (outsourcing) மூலமாக ஒப்பந்த (contract) அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும்.என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வாணாபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டத்தை உருவாக்கி அரசாணை வெளியீடு! appeared first on Dinakaran.

Tags : Vanapuram ,Kallakurichi ,Kallakurichi District ,Sankarapuram… ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...