×

வெங்கத்தூர் கிராமம் அருகே பைக் மீது வேன் மோதி விபத்து: ஒருவர் பலி

திருவள்ளூர்: வெங்கத்தூர் கிராமம் அருகே இருசக்கர வாகனம் மினி வேன் மீது மோதிய விபத்தில் ஒருவர் பலி இருவர் படுகாயம் அடைந்தனர்.திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியில் இருந்து எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் மாலை மினி வேன் ஒன்று கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கத்தூர் கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதேபோன்று வெங்கத்தூர், பெருமாள் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் மணி மகன்கள் நரசிம்மன்(38), வெங்கடாசலபதி(33) மற்றும் இவர்களது மைத்துனராகிய பிச்சாண்டி மகன் ராஜேந்திரன்(37) ஆகியோர் பெயிண்டர். இவர்கள் மூன்று பேரும் இரு சக்கர வாகனத்தில் வெங்கத்தூரில் இருந்து மணவாளன் நகர் வந்து கொண்டிருந்தனர்.

இரு சக்கர வாகனத்தை வெங்கடாசலபதி ஓட்டி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், வெங்கத்தூர் அருகில் செல்லும்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரும் நிலை தடுமாறி, மினி வேன் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வெங்கடாசலபதி சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு துடிதுடித்து பரிதாபமாக பலியானார். இந்த விபத்து குறித்து, தகவல் அறிந்ததும் மணவாளநகர் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பாபி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

இதில், படுகாயம் அடைந்த ராஜேந்திரனை சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கும், நரசிம்மனை திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வெங்கடாசலபதியின் உடலை திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மணவாளநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், பெயிண்டர் வேலையை முடித்துவிட்டு மூன்று பேரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. மின் லாரி ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வெங்கத்தூர் கிராமம் அருகே பைக் மீது வேன் மோதி விபத்து: ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Venkatore Village Thiruvallur ,Venkatur ,Venkathur Village ,
× RELATED அடுத்தடுத்து 3 கோயில்களில் திருட்டு